பூட்டிய வீடுகளிலிருந்து பணம், நகைகளைத் திருடிய காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது..
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகில் குறுமலையிலுள்ள நச்சுமேடு கிராமத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக அரியூர் காவல்துறை யினருக்குத் தகவல் வந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 காவலர்கள் நச்சுமேடு கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
சாராயம் காய்ச்சுவதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்றவர்கள் அங்கு அவர்கள் இல்லாததால் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 15 சவரன் நகைகளைத் திருடிச் சென்றனர். மலையை விட்டு கீழே இறங்கியவர்களை மலைக் கிராம மக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்ததில் கையும் களவுமாகச் சிக்கியவர்கள், திருடிய பணம் மற்றும் நகைகளைத் தாங்களாகவே எடுத்து திருப்பிக் கொடுத்தனர். அப்போது கிராமமக்கள் எடுத்த காணொலிக்காட்சி (வீடியோ) தற்போது வெளியிடப்பட்டதையடுத்து மலைக்கிராம மக்கள் அனைவரும் காவல்துறையினருடன் அரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளைத் திருடி வந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் ஆகிய 3 பேர் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததுடன் மூன்று பேரையும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கைதும் செய்யப்பட்டனர்.
கருத்துகள்