ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து மது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட 65 கிலோ கஞ்சா மற்றும் 15 மதுபுட்டிகள் இருந்தது தொடா்பாக இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் வட்டம், ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் வளத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தேவேந்திரன், காவலா்கள் கார்த்திக், யுவராஜ், மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. காவல்துறையினர் பின் தொடர்ந்து விரட்டுவதைக் கண்டு பேருந்திலிருந்து இருவர் கீழே குதித்து தப்பி ஓடும் வழியில் இரு இடங்களில் சில பைகளை வெளியே வீசினர். இதனைக் கண்ட காவல்துறையினர் அதைக் கைப்பற்றிய போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்ததையடுத்து பேருந்தை வளத்தி அருகே சந்தபேட்டையில் பேருந்தை மடக்கிப் பிடித்தனர். பேருந்திலிருந்து இருவா் தப்பியோடியவா்களைப் பிடிக்க முயன்ற போது, காவலா் யுவராஜுக்கு காயமேற்பட்டது. பேருந்து ஓட்டுநர் மதுரை திருநகர் பகுதி பாண்டியன் மகன் நடராஜை (வயது 39) பிடித்தவரிடம் விசாரணை நடத்தியதில் மொத்தம் 65 கிலோ எடையிலான 29 கஞ்சா பொட்டலங்களை பிகாரிலிருந்து மதுரைக்குக் கடத்திச் செல்வது தெரிய வந்தது. அவற்றுடன் 15 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், பேருந்தை வளத்தி காவல் நிலையம் கொண்டு சென்றனா். தப்பியோடிய கிளீனா் அருண், அவரது நண்பரைத் தேடி வருகின்றனா். ஆம்னிப் பேருந்தின் பெயர் தங்கம்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினா். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் எனக் கூறப்படுகிறது. இதே போன்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிச்சாராயம், ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்டவற்றை வளத்தி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கருத்துகள்