மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து காவிரி டெல்டா விவசாயப் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ ஆண்டு தோறும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்
இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினமாகிய 12 மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தின் முப்போக விளைச்சலுக்கு மேட்டூர் அணையின் பங்கு முக்கியமானது.
இன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைத்தார். திறந்து வெளிவந்த தண்ணீரில் மலர்களைத் தூவி வரவேற்றார். அணையின் வலது கரையில் விழா மேடை அமைத்திருந்தார்கள்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னதாக முதல்-அமைச்சர் நேற்று திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவரை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
சேலத்திலிருந்து இன்று காலை மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளைத் தொடங்கினர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 581 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கருத்துகள்