பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே முழுவதும் தயாராக வேண்டும் - திரு பியூஷ் கோயல்
இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள, ரயில்வே பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும் என்று ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று கூறினார்.
மழை காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மும்பை புறநகர் ரயில்வேயில் எடுப்பது குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.
பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த அமைச்சர், ரயில்கள் சுமூகமாக இயங்குவதற்கான திட்டங்களையும் ஆய்வு செய்தார்.
பருவமழையின் போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளதாக திரு கோயல் கூறினார்.
பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐஐடி மும்பை போன்ற நிறுவனங்களுடன் கைகோர்க்குமாறு ரயில்வேக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
ரயில்களின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும், கடின உழைப்பும் இணைய வேண்டும் என்று அவர் கூறினார்.
பொதுமுடக்கத்தின் போது 2,10,000 க்யூபிக் மீட்டர்கள் புறநகர் ரயில் பிரிவு பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான தீர்வுகள் வகுக்கப்பட்டன.
இந்திய வானிலை துறையுடன் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தானியங்கி மழை மானிகள் மேற்கு ரயில்வேயால் நிறுவப்பட்டுள்ளன. நீரேற்றி இயந்திரங்களின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, வாய்க்கால்களை சீரமைக்க நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீர் தேங்குவதை கட்டுப்படுத்துவதற்காக நவீன முறையில் கால்வாய்கள் கட்டமைக்கப்பட்டன.
ரயில்வே வாரியம் மற்றும் மும்பையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்