16 மாநிலங்களைச் சேர்ந்த சமுதாய வானொலி நிலையங்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு: மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 16 மாநிலங்களைச் சேர்ந்த சமுதாய வானொலி நிலையங்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு: மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு
யுனிசெப் அமைப்புடன் இணைந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 16 மாநிலங்களில் உள்ள சமுதாய வானொலி நிலையங்களின் பிரதிநிதிகளுக்கு தகவல் தொடர்பு விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தியது. கொவிட் சரியான நடத்தை விதிமுறைகள், கொவிட் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் தவறான கருத்துக்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே தடுப்பூசி பற்றிய சரியான தகவல்கள் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பயிலரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் இதில் உரையாற்றினார். உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டத்திற்கு சமுதாய வானொலி நிலையங்கள் ஆதரவளித்து வருவதாகப் பாராட்டு தெரிவித்த இணைச் செயலாளர், இந்த வானொலிகள் கொவிட் தடுப்பூசி குறித்துப் பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து ஒலிபரப்பி வருவதன் காரணமாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
கொவிட் சரியான நடத்தை விதிமுறைகளின் முக்கியத்துவம், தடுப்பூசிகள் சம்பந்தமான வதந்திகள் மற்றும் தடுப்பூசித் திட்டத்தின் வளர்ச்சி நிலை ஆகியவை குறித்து இதுபோன்ற வானொலி நிலையங்களில் பிராந்திய மொழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதால் இந்தியாவின் பழங்குடி மாவட்டங்களுக்கும் இது போன்ற செய்திகள் சென்றடைகின்றன.
கொவிட் தடுப்பூசிகள் குறித்து புதுமையான நிகழ்ச்சிகளை தயாரிக்குமாறும், பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் குறித்த மக்கள் இயக்கத்தை உருவாக்குமாறும் சமுதாய வானொலி நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மற்றும் யூனிசெஃப் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்