ஆந்திரப் பிரதேசத்தில் 3 நினைவுச் சின்னங்கள் “ஆதர்ஷ் ஸ்மாரக்” சின்னங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் தகவல்
கலாசாரத்துறை அமைச்சகம் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் 3 நினைவுச் சின்னங்கள் “ஆதர்ஷ் ஸ்மாரக்” சின்னங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி
ஆந்திரப் பிரதேசத்தில் 135 நினைவுச் சின்னங்கள்/ வளாகங்கள் மத்திய அரசால் பாதுகாக்கப்படுவதாக மத்திய கலாச்சார அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:
இது போன்ற பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது, அவற்றை தரம் உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனகொண்டா நினைவுச் சின்னங்கள், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள புத்த நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆனந்தபுரம் மாவட்டத்தின் லேபாக்ஷியில் உள்ள வீரபத்திர ஆலையம் ஆகியவை “ஆதர்ஷ் ஸ்மாரக்” சின்னங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வைஃபை, உணவகம், பிரெயில் சமிக்ஞைகள், கண்கவர் காணொளிகள் போன்ற கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். அரசு- தனியார் கூட்டமைப்புடன் சுற்றுலா அமைச்சகத்தின் பாரம்பரியத்தைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் கண்டிகோட்டா கோட்டை சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள்/ வளாகங்களைச் சுற்றிய பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வருடாந்திரப் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்