சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தொலைதூர சட்ட திட்டத்தின் கீழ், 9 லட்சம் பயனாளிகளை கடந்ததை கொண்டாடியது நீதித்துறை
தொலைதூர சட்ட திட்டத்தின் கீழ், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளை கடந்ததை நினைவு கூர்ந்து, விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் தொடக்கத்தை அறிவித்தது நீதித்துறை.
இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த காணொலி நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து, தொலை தூர சட்ட செயல்பாட்டாளர்கள் 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
தொலை தூர சட்ட திட்டத்தின் கீழ் மக்களின் அன்றாட சமூக மற்றும் சட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதில் வழக்கறிஞர்கள், சட்ட துணை தன்னார்வலர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைத்து தரப்பினரின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். பயனாளிகளின் வழக்குகளை தொகுக்க நீதித்துறை மேற்கொண்ட முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. நீதி வழங்கல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தொலை தூர சட்டத்தின் ஆற்றல் மகத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பரூன் மித்ரா பேசுகையில், ‘‘ காணொலி காட்சி மூலம் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, இலவச மற்றும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் பிரத்தியேக வழக்கறிஞர்களை இணைப்பதன் மூலம், பின்தங்கியவர்களுக்கு சட்டப்பூர்வ உதவிகளை தொலைதூர சட்டம் வழங்கியுள்ளது. சட்ட ஆலோசனை தேவைப்படுபவர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் சட்ட துணை தன்னார்வலர்களும், உள்ளூரைச் சேர்ந்த கிராம அளவிலான தொழில்முனைவோர்களும் உதவினர். தொலைதூரத்தில் உள்ளவர்கள் பயனடைவதற்காக, சட்ட துணை தன்னார்வலர்களுக்கு தொலைதூர சட்ட செயலியையும் நீதித்துறை உருவாக்கியது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், நீதித்துறை, சிஎஸ்சி இ-கவ், இந்தியா போஸ்ட் மற்றும் தேசிய சட்ட சேவை ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்