மாநில கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன் (ALJ) வாங்கிய நபர்களிடமிருந்து 'ஆதார்' ஆவணங்களின் நகல்களை வங்கி அலுவலர்கள் வாங்குகின்றனர்.
மாநிலக் கூட்டுறவுத் துறையில் வரும் மத்திய மற்றும் நகர கிராமக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமானக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகின்றன.
2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் நகை கடன்கள் வழங்கியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வின் அறிக்கையில் கொள்கை முடிவு வாக்குறுதியாக, 'கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமெனத், தெரிவிக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை முன்பே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போதும் அறிவித்தது. கூட்டுறவு வங்கிகளில், 2018 - 19, 2019 - 20, 2020 - 2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகைக் கடன் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்கள், நகைக் கடன் வைத்துள்ளவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகை கடன் வைத்த போது வழங்கிய அசல் ஆவணங்களை எடுத்து வருமாறு கூறுகின்றனர். 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியாகலாமென மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்