இந்திய அரசின் புதிய அமைச்சர்கள் துறை வாரியாக பொறுப்பேற்றார்கள்
திறன் வளர்த்தல் மற்றும்
தொழில்முனைதல் அமைச்சராக திரு தர்மேந்திர பிரதானும், இணை அமைச்சராக கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராஜீவ் சந்திரசேகரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தற்போது புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சராக இருந்த டாக்டர் மகேந்திரநாத் பாண்டே இந்நிகழ்வின் போது உடனிருந்து இரு அமைச்சர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அமைச்சகத்தின் திறன் வளர்த்தல் முயற்சிகளுக்கு வலுவூட்டவும், எதிர்கால பணிக்கு தேவையான திறன்களை இளைஞர்களுக்கு வழங்கி திறன் வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் தாம் உறுதிபூண்டு உள்ளதாக திரு தர்மேந்திரப் பிரதான் கூறினார். இணை அமைச்சராக பொறுப்பேற்ற திரு ராஜீவ் சந்திரசேகருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த திரு பிரதான், தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிக்க அவருடன் இணைந்து பணிபுரிந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான இந்தியாவை உலகின் திறன் தலைநகரமாக ஆக்குவதற்கு ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.
திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றுவது தமக்கு பெருமை அளிப்பதாக கூறிய திரு ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான டிஜிட்டல், திறன்மிக்க மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க தாம் கடினமாக உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்
.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானியிடமிருந்து ஜவுளி அமைச்சகத்தின் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார்.
இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு கோயல், தமக்கு வாய்ப்பளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். தமக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்த திருமதி ஸ்மிருதி இரானி, ஜவுளி அமைச்சகத்தில் பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு, சமீப காலத்தில் இத்துறை கணிசமான வளர்ச்சி அடைய காரணமாக இருந்துள்ளதாக அவர் பாராட்டினார். பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அளிக்கும் வகையில், இத்துறையை மேலும் வலுப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித் துறைகளிடையே இணக்கத்தை ஏற்படுத்த பிரதமர் திட்டமிட்டிருப்பதால், தமக்கு இந்த அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அதுவே காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய ஜவுளிகளை ஊக்கப்படுத்த அரசு விரும்புவதால், முன்காலத்தில் இந்தியாவிற்கான அடையாளத்தை கட்டமைப்பதில் ஜவுளி முக்கியப்பங்கு வகித்ததைப் போல மீண்டும் அத்துறை முக்கியத்துவம் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த மிகப் பெரும் வாய்ப்பை தமக்கு அளித்திருப்பதாகவும், அவரது தலைமை மற்றும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் வழிகாட்டுதல்படி ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காகவும் மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய துறையாக இதனை மாற்றவும் தாம் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்றும் உறுதி அளித்தார்.
பாதுகாப்புத்துறை இணையமைச்சராக திரு அஜய் பட் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றபின் அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சவுத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் திரு அஜய் பட்-ஐ வரவேற்று அவரது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த பொறுப்பை வழங்கியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சுட்டுரையில் நன்றி தெரிவித்த திரு அஜய் பட், 21 ஆம் நூற்றாண்டின் தற்சார்பு இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
திரு அஜய் பட், உத்தரகாண்ட் நைனிடால்-உதம்சிங் நகர் தொகுதி எம்.பி. அவர் பாதுகாப்பு நிலைக்குழு, சுகாதாரத்துறை ஆலோசனைக்குழு, துணை சட்ட குழு, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019 கூட்டுக் குழு மற்றும் மதிப்பீடுகள் குழு உறுப்பினராகவும் உள்ளார். இதற்கு முன்பு அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமன்ற விவகாரத்துறை, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். உத்தரகாண்ட் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
எஃகுத் துறை அமைச்சராக திரு ராம்சந்திர பிரசாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை எஃகுத்துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே வரவேற்றார்.
பதவியேற்ற பின் எஃகுத் துறை அமைச்சர் திரு ராம்சந்திர பிரசாத் சிங் அளித்த பேட்டியில், 2024 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதால், எஃகுத் துறை முக்கியப் பங்காற்றவுள்ளது எனக் கூறினார். எஃகுத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
திரு ராம்சந்திர பிரசாத் சிங், பீகார் மாநிலங்களவை எம்.பி. இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சராக திரு தன்வே ராவ்சாஹேப் தாதாராவ் பொறுப்பேற்றார். இத்துறைகளுடன், இவருக்கு ரயில்வே இணையமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக திரு தன்வே ராவ்சாஹேப் தாதாராவுக்கு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கரித்துறை செயலாளர் திரு அனில் குமார் ஜெயின், சுரங்கத்துறை செயலாளர் திரு அலோக் டாண்டன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக திரு ஹர்தீப் சிங் புரி பொறுப்பேற்றுக் கொண்டார். இணை அமைச்சராக திரு ரமேஷ்வர் தெளி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு அமைச்சராக இருந்த திரு தர்மேந்திர பிரதானும் இந்த நிகழ்வின்போது உடனிருந்தார்.
அப்போது பேசிய திரு புரி, “என் மீது நம்பிக்கை கொண்டு இந்த மிக முக்கிய அமைச்சகத்தின் அமைச்சராக பிரதமர் திரு நரேந்திர மோடி எனக்கு பொறுப்பு தந்துள்ளதற்கு மிகவும் பெருமை அடைகிறேன். திரு தர்மேந்திர பிரதானை போல் பணியாற்றுவது மிகவும் கடினம்.
இந்த அமைச்சகத்தின் செயல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அமைச்சகத்தில் உள்ள எரிசக்தி சார்ந்த விஷயங்கள் அபரிமிதமான சாத்தியக்கூறுகளையும் ஏராளமான சவால்களையும் உள்ளடக்கியுள்ளன. மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிசக்தி மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவது போன்றவை பிரம்மாண்ட வாய்ப்புகளை வழங்கும்.
5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேறும் வேளையில் எரிசக்தியின் கையிருப்பு மற்றும் பயன்பாடு மிகப்பெரும் முக்கியத்துவத்தைப் பெறும்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் நான் கவனம் செலுத்துவேன்.
இயற்கை எரிவாயுவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாகவும் நான் பணியாற்றுவேன். பிரதமர் அறிவித்தவாறு 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் முதன்மை எரிசக்திக் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்துவேன்.
கடந்த ஏழு ஆண்டுகளில் எனக்கு முன்பு இந்தப் பணியில் இருந்த திரு தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின் கீழ் இந்தத் துறையில் ஏராளமான சீர்திருத்தங்களும் முன் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை முன்னெடுத்துச் செல்வதுடன், பிரதமர், நம் நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யவும் நான் பாடுபடுவேன்”, என்று தெரிவித்தார்.
மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக திரு ராஜ் குமார் சிங் பொறுப்பேற்றார். இந்த பொறுப்பை வழங்கியதற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்த, திரு ஆர்.கே.சிங், பிரதமர் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம் என்றார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் நிர்ணயித்த மின்மயமாக்கல் இலக்கை நாங்கள் குறித்த காலத்துக்கு முன்பே அடைந்துள்ளோம் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையின் பயன்கள் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பாடுபடுவோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் அவருக்கு மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக திரு கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த அவர், ‘‘ சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எனது முன்னுரிமையாக இருக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க நான் எப்போதும் முயற்சிப்பேன்.
சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு, திரு கிரண் ரிஜிஜூ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக 2019 மே முதல் 2021 ஜூலை வரை பணியாற்றினார் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக 2014 மே முதல் 2019 மே வரை பணியாற்றினர்.
தீவிர அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த திரு கிரண் ரிஜிஜூ, பொது விவகாரங்களில் மாணவர் பருவத்தில் இருந்தே ஆர்வம் காட்டினார். தனது 31வது வயதிலேயே காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு, மேற்கு அருணாச்சலப் பிரதேச தொகுதியிலிருந்து 14வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இவரது வருகைப்பதிவு 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளை இவர் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
முக்கிய விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
சிறந்த இளம் நாடாளுமன்றவாதியாகவும் இவர் திகழ்ந்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராக திரு நாராயண் டட்டு ரானே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 35 ஆண்டுகாலமாக பல்வேறு பதவிகளில் பொதுச் சேவையில் இருந்துள்ளார்.
ஐந்து முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி, திரு பானு பிரதாப் சிங் வர்மா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். எம்.பி.யாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நல குழுவில் உறுப்பினராகவும் அவர் இருந்தார். மத்திய அமைச்சர் மற்றும் இணையமைச்சர் ஆகியோரை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
பதவியேற்றபின் பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு நாராயண் டட்டு ராணே, ஆற்றல்மிக்க தலைமை மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மீது வைத்துள்ள அக்கறைக்காகவும், பிரதமரை பாராட்டினார். பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் அமைச்சர் கூறினார்.
இத்துறையின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட வைத்து, அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி இவற்றின் பங்களிப்பை இரட்டிப்பாக்கவும், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி மூலம் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றவும் மத்திய அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சி, கடன் மற்றும் நிதியுதவி, தொழில்நுட்ப மேம்பாடு, திறன் மேம்பாடு போன்ற பல திட்டங்கள் மூலம் தற்சார்பு இந்தியா நடவடிக்கையின் கீழ் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அதிக எண்ணிக்கையிலான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை சேர்க்க மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் மத்திய இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்தார். மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் முன்னிலையில் எரிசக்தி இணை அமைச்சராக திரு கிரிஷன் பால் குர்ஜர், பொறுப்பேற்றுக் கொண்டார்.
எரிசக்தி செயலாளர் திரு அலோக் குமார், அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சராக திருமதி அனுப்பிரியா பட்டேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மிர்சாபூர் தொகுதியிலிருந்து 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மக்களவைக்கு திருமதி அனுப்பிரியா பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
2016 முதல் 2019 வரை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராக திரு பூபேந்தர் யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், அரசுக்கு பணியாற்றுவதற்காக தமக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் அளித்த பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று திரு யாதவ் கூறினார்.
பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை திரு யாதவ் நட்டார்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் செயலாளர் திரு ராமேஸ்வர் பிரசாத் குப்தா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக திரு மன்சுக் மண்டாவியா பொறுப்பேற்பு; இணையமைச்சராக டாக்டர் பாரதி பிரவீன் பவார் பொறுப்பேற்பு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறையின் இணையமைச்சராக டாக்டர் பாரதி பிரவீன் பவார் பொறுப்பேற்றார்.
அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர்கள் திருமிகு வந்தனா குர்னானி, டாக்டர் மனோகர் அக்னானி, திரு விகாஷ் ஷீல், திரு அலோக் சக்சேனா, உடல் தகுதி மற்றும் விளையாட்டு அறிவியல் சங்கத்தின்(எப்எஸ்எஸ்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி திரு அருண் சிங்கால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
கருத்துகள்