சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் கௌரவ விரிவுரையாளரின் உடல் மீட்பு.
அவர் தங்கியிருந்த அறையில் 11 பக்கக் கடிதத்தை காவல்துறை கைப்பற்றினர். ஜாதி ரீதியிலான பாகுபாட்டினால் இந்த மர்ம மரணம் நடந்துள்ளதாயென காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இரகு இஸ்ரோவில் விஞ்ஞனியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரது மகன் உன்னிக்கிருஷ்ணன் நாயர்(வயது 30). கேரளாவில் பி.டெக் படித்து முடித்து சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் தற்காலிகதீ திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றினார். ஐஐடியில் விடுதி கிடைக்காததால், அனில்குமார், பிரகாஷ் ஆகியோருடன் வேளச்சேரியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஐஐடிக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவரது மோட்டார் பைக்கை வீட்டிலேயே விட்டுள்ளார். மேலும், அவரின் செயின், மோதிரம் ஆகியவையும் அறையிலேயே இருந்தது. பணிக்கு வந்தவர், பிற்பகல் முதல் மாயமானார். வழக்கமாக மாலை நேரங்களில் சென்னை ஐஐடிவளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை ஹாக்கி பயிற்சியாளர் ராஜூ உடன் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாக்கி மைதானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது மைதானத்தின் ஓரம் வாலிபர் ஒருவர் உடல் முழுமையாக தீயில் எரிந்து கரிக்கட்டையாக இறந்து கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்து, ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் தந்ததைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.
கோட்டூர்புரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது தான் ஐஐடியில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணனை அடையாளம் கண்டனர் பின் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உன்னிக்கிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியதில் அவரது படுக்கை அறையில் உன்னிக்கிருஷ்ணன் தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதம், லேப்டாப், செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கடிதத்தில் உன்னிக்கிருஷ்ணன் என்ன எழுதியுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் சொல்ல மறுத்துவிட்டனர்.
ஆனால், கடிதத்தில் வேலை செய்யும் இடத்தில் அதிகளவில் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், பணி செய்ய முடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்ததாக உடன் தங்கி இருந்து அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அதேநேரம் உன்னிக்கிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் உள்ள தகவலின் படி காவல்துறை ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர்.
கேரளாவிலிருந்து சென்னை வந்த உன்னி கிருஷ்ணன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த விபின் வி.விட்டல் என்பவர் சென்னை ஐஐடியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் ஜாதி ரீதியாகப் பாகுபாடு காட்டுவதாகவும், இதனால் அங்கு வேலை செய்ய முடியவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினமா செய்து அதற்கான கடிதத்தை சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ப்பரபரப்பு அடங்குவதற்குள் உன்னிகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்துள்ளார். ஜாதி ரீதியான பாகுபாட்டால் உன்னிக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா வேறு காரணங்கள் உள்ளதா என தொடர் விசாரணை நடத்தி வரும் காவல்துறை.
2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் மாணவியின் இறப்புக்கு மத ரீதியான நெருக்கடியே காரணமெனத் தெரியவந்தது தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் அதற்குத் இப்போது வரை தீர்வு வரவில்லை. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஜாதி மத ரீதியாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் வகையிலும், பணியிலிருந்து ராஜினமா செய்யும் வகையிலும் தொடர் சம்பவங்கள் சென்னை ஐஐடியில் நடந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்