பிரதமர் அலுவலகம் பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் மேதகு திரு ஃபாம் மின் சின்ஹ் இடையே தொலைபேசி உரையாடல்
பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் மேதகு திரு ஃபாம் மின் சின்ஹ் உடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.
வியட்நாம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு திரு ஃபாம் மின் சின்ஹ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு மோடி, அவரது திறமையான வழிகாட்டுதலின் கீழ் இந்திய- வியட்நாம் விரிவான கேந்திர கூட்டணி மேலும் தொடர்ந்து வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திறந்த, உள்ளடக்கிய அமைதியான, விதிகளின் அடிப்படையிலான இந்திய பெருங்கடல் பகுதி குறித்த தொலைநோக்குப் பார்வையை இரு நாடுகளும் பகிர்ந்துவருவதால், பிராந்திய நிலைத்தன்மை, வளம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்திய- வியட்நாம் விரிவான கேந்திர கூட்டணி பங்களிக்கக் கூடும் என்பதால் அதனை பிரதமர் திரு மோடி வரவேற்றார்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவும் வியட்நாமும் தற்போது உறுப்பு நாடுகளாக செயல்படுவதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது இந்தியாவிற்கு விலைமதிப்பில்லா ஆதரவளித்த அந்நாட்டு அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் திரு சின்ஹிடம் திரு மோடி தெரிவித்தார். பெருந்தொற்றுக்கு எதிராக இரு நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் தொடர்ந்து வழங்க தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட இருவரும், வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்த தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இருநாட்டு தூதரக உறவின் பொன் விழா, 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருப்பதைக் குறிப்பிட்டு, பல்வேறு நினைவுகள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்த மைல்கல் நிகழ்வைக் கொண்டாட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
விரைவில், பொருத்தமான தேதியில் இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வருமாறு பிரதமர் சின்ஹ்க்கு பிரதமர் திரு மோடி அழைப்பு விடுத்தார்.
கருத்துகள்