ஊரக வளர்ச்சி அமைச்சகம் தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1183 அணிதிரட்டல் முகாம்கள்
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு தீனதயாள் உபாத்தியாயா கிராம கௌசல்யா திட்டத்தின் கீழ் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 13 முதல் 19 வரை நாடு முழுவதும் 1183 ‘அணிதிரட்டல் முகாம்கள்' நடைபெற்றுள்ளன. மாநில கிராம வாழ்வாதார இயக்கங்கள், மாநில திறன் இயக்கங்கள் ஆகியவை, திட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து அகில இந்திய அளவிலான முகாம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.
இந்த முகாம்களில் பங்கேற்பதற்காக, 371 திட்ட அமலாக்க முகமைகள், நாடு முழுவதிலும் இருந்து 83795 பேரை திரட்டின. கொவிட் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்த முகாம்கள் நடைபெற்றன. வரவிருக்கும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வதற்காக 75,660 பேர் பதிவு செய்துள்ளனர்.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் திறன் பயிற்சிகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான தீனதயாள் உபாத்யாய கிராம கௌசல்யா திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பல்வேறு துறைகளில் ஏழை கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
27 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் ஜூலை 31-ஆம் தேதி வரை 10.94 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்று 7.07 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கருத்துகள்