பாதுகாப்பு அமைச்சகம் பீரங்கிப் படை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் தருண்குமார் சாவ்லா பொறுப்பேற்கவுள்ளார்
பீரங்கிப் படை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் தருண்குமார் சாவ்லா, ஆகஸ்ட் 1, 2021 அன்று பொறுப்பேற்றுக் கொள்வார். ராணுவத்தில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஜூலை 31 அன்று ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கே ரவி பிரசாத்திடமிருந்து அவர் இந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்வார்.
லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் சாவ்லா, டேராடூன் புனித தோமையார் உயர்நிலைப்பள்ளி, கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, வெலிங்டனின் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி மற்றும் புதுதில்லியின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவராவார். அவர் கடந்த 1984-ஆம் ஆண்டு பீரங்கிப் படையில் இணைந்தது முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கிழக்கு மற்றும் மேற்கு பீரங்கி படைகளுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் சாவ்லா லைபீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் இயக்கத்தின் ராணுவ பார்வையாளராக பணியாற்றினார். பாதுகாப்பு மற்றும் கேந்திர ஆய்வுகள் மற்றும் ஆயுத அமைப்புமுறைகளில் இரட்டை முதுநிலை பட்டமும், பாதுகாப்பு மற்றும் கேந்திர ஆய்வுகளில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
கருத்துகள்