இலஞ்ச ஊழல் பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை
கட்டிடப் பணியை நிறுத்தாமலிருக்க ரூபாய் 10 ஆயிரம் இலஞ்சம் கேட்ட சென்னை பெருநகர மாநகராட்சி பொறியாளருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த சென்னை ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
சென்னை நசீர் அகமது கட்டிடக் கான்ட்ராக்டர்.
கொளத்துார், அன்னை சத்தியா நகரில், தனது உறவினர் முகமது வீட்டில் முதலாவது தளம் கட்டும் பணியை 2011 ஆம் ஆண்டில் மேற்கொண்டார்.
கட்டுமானப் பணி நடந்த போது, சென்னை பெருநகர மாநகராட்சியின் நான்காவது மண்டல உதவிப் பொறியாளர் பி.சங்கரன், கட்டுமானத்தைப் பார்வையிட்டு, கட்டட அனுமதிக்கான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.
ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டு, தன்னை அலுவலகத்தில் வந்து ரகசியமாகச் சந்திக்கும்படி, நசீர் அகமதுவிடம் கூறியதால் அவர்
சந்தித்தபோது, ரூபாய் 10 ஆயிரம் இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
'கொடுக்கவில்லை எனில், கட்டிடம் இடிக்கப்படும்' என கூறி பயம் காட்டியுள்ளார். தன்னிடம் உரிய சரியான ஆவணங்கள் இருந்த நிலையில் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்பத் துறையில் நசீர் அகமது புகாரளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, முதற்கட்டமாக 2,000 ரூபாயை இலஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
பணத்தை சங்கரன் வாங்கிய போது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஓம் பிரகாஷ், உதவிப் பொறியாளர் சங்கரனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கருத்துகள்