தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு, கோவிட்-19: நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி, 75-ஆவதுசுதந்திர ஆண்டு விழாக் கொண்டாட்டம், விழிப்புணர்வு வாகனத் துவக்க நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் – தஞ்சாவூர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் – தஞ்சாவூர் இணைந்து “தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு, கோவிட்-19: நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி, 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாக் கொண்டாட்டம், விழிப்புணர்வு வாகனத் துவக்கம்” ஆகியவற்றை இன்று நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் தஞ்சாவூர் மாவட்ட திட்ட அலுவலர் திரு. டி. ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் திரு. எஸ். நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தைக் கொடியசைத்தும், நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு. டி. ராஜ்குமார், ஊட்டச்சத்து விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைய வேண்டும். குறிப்பாக அங்கன்வாடி மூலம் விநியோகிக்கப்படும் சத்துமாவு, முட்டை, சிறுதானிய உணவுகள் போன்றவற்றின் பயன்களை கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிக் குழந்தைகள் நன்கு அறிந்து அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். முதல் 1000 நாட்கள், பேருகால சத்துணவு குறித்த அனுபவங்களை இத்திட்டப் பயனாளிகள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் திரு. எஸ். நமச்சிவாயம் சிறப்புரையாற்றுகையில், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கட்டாயம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மூலம் விநியோகிக்கப்படும் ஊட்டச்சத்து மாவினை அடை, பனியாரம், முருக்கு, கஞ்சி, பாயாசம் போன்று 15 வகையான உணவுகளாகத் தயாரித்து உண்ணலாம். இதன்மூலம் குழந்தைகள் இந்த உணவை முழுமையாக உண்பதை நாம் உறுதி செய்து ஊட்டச்சத்து சென்றடைவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். அதோடு கொரோனாவைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் திரு. கே. ஆனந்த பிரபு, மத்திய-மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனாவை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். சத்துமாவை அனைவரும் கட்டாயம் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.அருண் குமார் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (சிடிபிஒ) பிலோமினா சாந்தினி நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மற்றும் அதன் பயன்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
“மகப்பேறு காலத்தில் தாய்-சேய் நலனுக்கு அவசியம் ஊட்டச்சத்து” என்ற தலைப்பில் கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட விநாடி விநா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இசை மற்றும் நாடகப்பிரிவின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
கருத்துகள்