தமிழ் நாட்டின் 25 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார்
. அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து பதவியேற்பு விழா நடந்தது.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் மற்றும்,அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 500 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், குடியரசுத் தலைவரால் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்து உத்தரவிட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.துவக்க காலங்களில் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். பின் ஐபிஎஸ் தேர்வு பெற்று கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின் மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகி உளவுத்துறையில் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில் அரசுப் பணியில்இருந்து ஓய்வு பெற்றார்.2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், பிரதமர் அலுவலகக் கூட்டு உளவுக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆனார்.
இந்திய அரசின் சார்பில் நாகாலாந்திலுள்ள பிரிவினைவாத அமைப்புகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் அழுத்தம் காரணமாக, பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதற்குக் காரணமான ரவி, அப்போது பெரிதும் பாராட்டப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் .
ஆளுநரானவுடன் தன் அதிகாரத்தைகா காட்ட ஆரம்பித்தார் இதனிடையே என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன் மோதல் ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் செயல்படும் ஏழு தீவிரவாத இயக்கங்களை ஒருங்கிணைத்து, `நாகா தேசிய அரசியல் குழு' என்ற ஒன்றை உருவாக்கச் செய்து, அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆனால் பெரிய குழுவான என்.எஸ்.சி.என் (ஐ.எம்)யை புறக்கணித்தாக கூறப்படுகிறது. அவர் நாகாலாந்திலிருந்து மாற்றப்பட்டால் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும்' என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
நாகாலாந்து முதல்வர் நெப்யூ ரியோவுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அவரும் கொதித்து போய் பா.ஜ.க தலைமைக்கு பிரச்சனையை கொண்டுசென்றார் . ஒரு கட்டத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் வேறு வழியில்லாமல் மத்திய அரசால் அவர் தமிழ் நாட்டில் ஆளுநராக நியமிக்கப்பட்டார் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்தது இல்லை என்று கூறி ஆளுநரை வழியனுப்பும் விழாவை அங்குள்ள பத்திரிக்கைகள் புறக்கணித்தன. இது தொடர்பாக விவாதங்களும் எழுந்தன.
தற்போது தமிழக ஆளுநராக ரவி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் நாகலாந்திலிருந்து தமிழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று வரவேற்ற நிலையில் தமிழகத்தின் 25 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றார் . அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கருத்துகள்