ஊட்டச்சத்து மாதம், கொவிட் தடுப்பு குறித்து பெரம்பலூரில் உள்ள செட்டிகுளத்தில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டச்சத்து மாதம், கொவிட் தடுப்பு மற்றும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் குறித்து ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூரில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் இருக்கும் செட்டிகுளம் கிராமத்தில் நடத்தியது.
தலைமையுரை ஆற்றிய ஆலத்தூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் என் கிருஷ்ணமூர்த்தி, பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து உழைத்தால் மட்டுமே குடும்பம் முன்னேற முடியும் என்று கூறிய அவர், பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளுமாறும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஆரோக்கியமாக இருக்குமாறும் பெண்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அறிமுகவுரை ஆற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் கே தேவி பத்மநாபன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதாக கூறினார். குழந்தைகள் மற்றும் பெண்களின் (குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள்) ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2018 மார்ச் 8 அன்று ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டதென்று அவர் கூறினார்.
தேவையிருப்போர் இடையே ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் நோக்கில் 2018-19-ல் ஊட்டச்சத்து திட்டத்தில் பெரம்பலூர் இணைத்துக்கொள்ளப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஊட்டச்சத்து மாத கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இந்த வாரம் யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து மாதத்தில் மொத்தம் நான்கு மையக்கருக்கள் இருப்பதாகவும், முதலாவதாக குறிப்பாக அங்கன்வாடிகள், பஞ்சாயத்து இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் ஊட்டச்சத்து மிக்க செடிகளை நடுவதற்காக செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டசத்து மரம் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டாவது மையக்கருவான ஆரோக்கிய ஊட்டசத்திற்காக யோகா செப்டம்பர் 8 முதல் 15 வரை அனுசரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், மூன்றாவது பகுதியாக செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்றும் நான்காவதாக செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடுவது குறித்தும், அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட நாயகர்களின் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். கொவிட் பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுப்பதில் அனைவரும் கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதன் பங்கு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய வட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் வி மகாலட்சுமி, கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார். செப்டம்பர் 19 அன்று கொவிட் தடுப்பூசி முகாமை அரசு நடத்தவிருப்பதாகவும், அனைவரும் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார். கொரோனா இரண்டாவது அலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பலர் பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், கொவிட்டிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை தாய்ப்பால் கொடுத்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர் கூறினார். ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவுக்கான மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதித்த பின்னர் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
வரவேற்புரை வழங்கிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே ரவீந்திரன், ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதுமுள்ள கள விளம்பர அலுவலகங்கள் நடத்தி வருவதாக கூறினார். ஆலத்தூர் பஞ்சாயத்து ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஆலத்தூர், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஸ்ரீ ரங்கம் விவேகானந்தா யோக மையம் ஆகியவற்றோடு இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
கொளக்காநத்தம் பஞ்சாயத்து தலைவர் திரு என் ராகவன், தேரணி பஞ்சாயத்து தலைவர் திரு ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட கண்காணிப்பாளர் திருமதி எஸ் ஜெயா, வட்ட மருத்துவ கண்காணிப்பாளர் திரு ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
ஸ்ரீ ரங்கம் விவேகானந்தா யோக மையத்தின் யோகா ஆசிரியர்கள் டாக்டர் டி சந்தானகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஆர் ஸ்ரீதர் ஆகியோர் யோகாசனங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
ஊட்டசத்து மாதம், 75 ஆண்டுகள் சுதந்திரம் மற்றும் கொவிட் தடுப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பெரம்பலூரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தும் வகையில் எல் ஈ டி விழிப்புணர்வு வாகனம் செட்டிக்குளத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. ஊட்டச்சத்து மாதம், சுதந்திர போராட்டம், கொவிட் தடுப்பு குறித்த பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி பதிவுபெற்ற குழுவால் நடத்தப்பட்டது.
ஆரோக்கியமான குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்த கண்காட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தால் நடத்தப்பட்டது. பதிவுபெற்ற குழுவான அபிநயா கலைமன்றத்தின் கலைஞர்கள் ஊட்டச்சத்து மாதம், தூய்மை இயக்கம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.
கருத்துகள்