தரணியிலே பரணி பாடிய கலிங்கப்போரில் நடந்த
அழிவைப்பார்த்து மனம் வருந்தி சமண மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறிய மாமன்னர் அசோகரை வரலாறில் விரிவாக அனைவரும் அறிந்ததே.
ஆனால் சில நூற்றாண்டுகள் கழித்து தமிழ் நாட்டில் நடைபெற்ற நிகழ்வை வரலாறு அழுத்தமாகக் கூற மறந்தது மனம் மாறியவர் மன்னர் சாம்ராட் அசோகரல்ல ,போரைவென்ற ,வெற்றிக்கு காரணமான தளபதிதான் பரஞ்சோதி அவரே வாதாபி போருக்குப் பின் மனம் மாறி சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்று சிவனடியாரானார் .
கி.பி.642 ஆம் ஆண்டில் வாதாபி நக
ர் மீது படையெடுப்பு நடந்தது .இப்படையில் ஒரு லட்சம் காலாட்படை வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் பாகன்களுமிருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் காணப்படுகிறது . இத்தகைய பெரும் போர் படை ஏன் தேவைப்பட்டது என்றால் , நாம் சாளுக்கிய புலிகேசி பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் .
இரண்டாம் புலிகேசி ஆட்சியில் இந்தியாவில் அப்போது பெரும் மன்னர்களாக இருந்தவர்கள் இருவர் தான்
வடக்கிலிருந்த ஹர்ஷவர்த்தன் ,தெற்கில் பல்லவர்கள் .
இருவரையும் ஒரு முறை வென்றவர் தற்போது கர்நாடக மாநிலத்தின் அப்போது வாதாபியை ஆண்ட சாலுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி.ஹிந்து அரசரானவர், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறியீடுகள் உள்ளன.
பல்லவ நாட்டில் கி பி 630 ஆம் ஆண்டு வாக்கில் நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புலிகேசி படை எடுத்தார். ஆனால் இம்முறை பல்லவர்கள் காஞ்சிபுரம் அருகே மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்றோட, விடாத நரசிம்மவர்மன் படை அவர்களை வாதாபி வரை துரத்திச் சென்றது. கிபி 642 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த கோரத்தனமான யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. இரண்டாம் புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகராகவே இல்லை.
அமரர் கல்கி தனது புகழ்ப்பெற்ற சிவகாமியின் சபதம் எனும் நூலில் ‘புலிகேசி என நமக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் வரலாற்று நூல்கள் புலகேசி’ என்றே கூறுகின்றன
பல்லவ தளபதி பரஞ்சோதி பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார் போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாகவும் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
அந்த சிறுத்தொண்டர் வாழ்ந்த மாளிகை தான் இன்று கோவிலாகவுள்ளது எனவும் கூறப்படுகிறது .
கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடபடுகிறது
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலமாகும்.
விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார்.
அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது.
தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. - ------------ ==திருஞானசம்பந்தப் பெருமான்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் ஸ்தலங்களில் இது 79 வது ஸ்தலம்.
ஆனால் இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது
எது உண்மை ?
பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே குறிப்பிடுகிறார்.
திருவாரூர் கோவிலை பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்த பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் திருவாரூர் கோவிலில் முதல் பிரகாரத்தில் ,தியாகராஜர் சிலைக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரே உண்மையான வாதாபி விநாயகர் என தனது திருவாரூர் திருக்கோவில் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்ப இயல் அடிப்படையில் நோக்கும்போது அது மேலை சாளுக்கியர்களின் வாதாபி நகர கலை பாணி அன்று. மாறாக நமது சோழநாட்டுத் திருமேனியாகத்தான் (சோழர்கள் காலப் பாணி) உள்ளது. ஆனால் திருவாரூரில் உள்ள "வாதாபி விநாயகர்" என்னும் சிற்பம் தமிழக சிற்ப அமைப்பிலிருந்து மாறுபட்டும், தொன்மையானதாகவும் சாளுக்கிய நாட்டு சிற்ப எழிலுடன் உள்ளது சிந்திக்கதக்கதாகும்.
முத்துசுவாமி தீட்சிதர் எழுதி பாடிய "வாதாபி கணபதி பஜேஹம்" என்ற பாடல் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு முன்பு இயற்றப்பட்டது என்ற பெருமையும் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு உண்டு
விநாயகர் வழிபாட்டை பற்றி ஆய்வு செய்த டேவிட் பிரவுன் என்ற அமெரிக்க இறையியல் ஆய்வாளர் எழுதிய Ganesh: Studies of an Asian God புத்தகத்தில் திருவாரூரில் உள்ள விநாயகரே வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் என குறிப்பிட்டுள்ளார்
அத்தோடு திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு
டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக எழுதியுள்ளார் .
விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்ததை பற்றி குறிப்பிடும் பொது காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாதாபி கணபதி பற்றிய தனது ஆராய்ச்சியை குறிப்பிடுகிறார். அதில் திருவாரூரில் உள்ள வாதாபி கணபதியின் வடிவமைப்புத்தான் சாளுக்கியர் கால வடிவமைப்பு என்றும் திருச்செங்காட்டாங்குடி வாதாபி கணபதி சாளுக்கியர் பாணியில் அமையவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், “பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே” என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் “ஞான விநாயகர்” என்னும் கட்டுரையில் உள்ள பக்கம் 20 ல்)
பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை
நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ் விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார்.
(ஏழாம் நூற்றாண்டு )
உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார்.
வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், “தன்னை நினையத் தருகிறான்” என்ற கட்டுரையில் பக்கம் 17 ல்)
முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை.
கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான பாகல் கோட்டையில் தான் பதாமி (சாலுக்கியர்களில் மேலைச் சாளுக்கியர் மற்றும் கீழைச் சாளுக்கியர் என உண்டு) அமைந்திருக்கிறது. வதாபியின் இன்றைய பெயர் பதாமி. வதாபி எனும் அரக்கன் அகஸ்திய முனிவரால் கொல்லப்பட்டதால் இந்த இடத்திற்கு வதாபி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. என்கிறார் .
ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு விநாயகர் வழிபாடு கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்ததை வரலாறு நிறுவுகிறது .
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் மும் கிராமத்திலுள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பீடத்தில் பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதை கண்டறிந்த கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதி, ‘தமிழ கத்திலுள்ள விநாயகர் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது’ என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் தொடங்கியது என்பார்கள். நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி, வாதாபி யில் 2 ஆம் புலிகேசியை வெற்றி கொண்டதால் அதன் நினைவாக வாதாபி கணபதி என அழைக்கப் பட்டு, கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாட்டுக்கு வழி வகுத்தது என சிலர் கூறும் நிலையில்.
தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி எனும் மருதங்குடி எனும் பழமையான இராஜநாராயனபுரம் குடை வரை கோயிலில் உள்ள தேசி (கற்பக) விநாயகப் பெருமான் சிலை, கி.பி. 6 ஆம் நூற் றாண்டுக்கு உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல் தச்சனின் பெயர் எக்காட்டூரூ க்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது.
இது, கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது.
மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத 2 சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.
தற்போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்திலுள்ள எமதண் டீஸ்வரர் கோவிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளை யார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் செதுக்கப்பட்டது.
பிள்ளையார் பீடத்தில் 3 வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூலங்குறிச்சி inscription க்கு எழுத்து வடிவத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக் கோவில் கல்லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதுமாகும். அதாவது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும்.
ஆலகிராமத்தில் பிள்ளையார் பீடத்தில் உள்ள கல்லெழுத்துகள் கி.பி. 5 ஆம் நூற் றாண்டைச் சேர்ந்தவை என்று ஐ.மகாதேவன் தெரிவிக்கிறார்.
இச்சிற்பத்தில் “பிரமிறை பன்னூற- சேவிக- மகன்- கிழார்- கோன்- கொடுவித்து” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, கல்வெட்டை செதுக்கிய சிற்பியை பற்றி கூறுகிறது.
தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் இப்பிள்ளையார் இந் திய வரலாற்றுக்கு புதிய வரவாகும். இதுவே தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் காலத் தால் முந்தையதாகும் . ஆலகிராமத்தில் உள்ள எமகண்டீஸ்வரர் கோயிலுக்கு 1943, 1952, 1963, 1969 ஆகிய ஆண்டுகளில் காஞ்சிப் பெரியவர் வருகை புரிந்துள்ளார்.
எனவே விநாயகர் எனும் நாயகர்களில் முதன்மையான கடவுளின் வழிபாடு தமிழ் நாட்டில் வாதாபி கணபதி வருவதற்கு முன்பேயே இருந்ததை பிள்ளையார் பட்டி மற்றும் சமீபத்திய ஆலகிராமம் கண்டுபிடிப்பின் மூலம் ஐந்தாம் நூற்றாண்டு வரை கொண்டு செல்லலாம் .
பிள்ளையார் சுழி எனும் உகாரம் பிரணவத்தின் பொருளைக் கூறுவதாகும் அவ்வைக்கு விநாயகரும் தொடர்பு படுத்தி பல கதைகள் உண்டு , அவ்வையின் விநாயகர் அகவல் பெரிய ஒரு ஞான நூலாகும் .
அப்பமொடு அவல் பொரியுடன் கூடவே அகவல் பாடி
இன்றைய விநாயகப் பெருமான் நாளைக் வீட்டில் கொண்டாடுவோம் .வாழ்த்துக்கள். மத்திய உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ள நிலையில்.
பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1987 க்குப் பின்னர் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவியதுமான வட இந்தியக் கலாச்சாரத்தில் நடந்துவரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்திய மக்கள் ஆறாம் நூற்றாண்டில் துவங்கி வழிபாடு நடத்திவரும் வீட்டில் ஆலயத்தில் நடைபெறும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.
கருத்துகள்