பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டிரைஃபெட் : பிக் பேஸ்கட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை வளர்ச்சி கூட்டமைப்பு(டிரைஃபெட்), பிக் பேஸ்கட், ஜார்கண்ட்டின் புர்தி அக்ரோடெக் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா பேசியதாவது:
வரும் காலங்களில், பழங்குடியினர் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த லட்சிய திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, இரு முக்கிய நடவடிக்கைகளாக, பிக் பேஸ்கட் மற்றும் ஜார்கண்ட்டின் புர்தி அக்ரோடெக் ஆகியவற்றுடன் டிரைபட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாடும் வேளையில், கடைக்கோடியில் உள்ள மக்களை சென்றடைந்து, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக பணியாற்றுவது பிரதமரின் தொலைநோக்கு. இந்த உணர்வுடன், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் டிரைஃபெட் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. பழங்குடியினர் மக்களிடையே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பழங்குடியினரின் வன சேகரிப்பு பொருட்களை பிக் பேஸ்கட் நிறுவனம், புர்தி அக்ரோடெக் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் விற்க டிரைபெட் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் விற்பனை வாய்ப்பை மேம்படுத்தும்.
பழங்குடியின கலைஞர்கள், பழங்குடியின உற்பத்தியாளர்கள், அவர்களின் தயாரிப்புகள் மற்றும் வாழ்வாதார திட்டங்களில் பிரதமர் கவனம் செலுத்துகிறார். தற்போது பழங்குடியினர் தயாரிப்பு பொருட்கள் டிரைபட் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறினார்.
கருத்துகள்