அசாமில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் கருத்து
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அசாமில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா
அசாமில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
அசாமில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, மற்றும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைபட் )அதிகாரிகள் இன்று முடித்தனர்.
அதன்பின் பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறியதாவது:
பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை மாநிலத்தில் முறையாக அமல்படுத்துவதில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது. பழங்குடியினர் தயாரிப்பு மற்றும் சேகரிப்பு பொருட்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்துவதன் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் முழுமையான வளர்ச்சியை கொண்டு வருவதில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.
நாட்டின் பழங்குடியினர் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, சுமார் 40 அமைச்சகங்களுடன் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் இணைந்து செயல்படுகிறது. அசாமில் மேலும் 184 வன்தன் மையங்கள் அமைக்கப்படும். வரவிருக்கும் பிரதமரின் ஆதர்ஷ் கிராம திட்டத்துக்கு அசாமில் 1700 மாதிரி கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாநிலத்தில் பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 480 பழங்குடியினர் மாணவர்கள் தங்க முடியும். இங்கு விளையாட்டு வசதிகள், ஆசிரியர் குடியிருப்புகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா கூறினார்.
இந்த 2 நாள் பயணத்தில் அசாம் ஆளுநர் திரு ஜெகதீஷ் முக்கியை, குவஹாத்தி ராஜ்பவனில் மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா சந்தித்தார். அப்போது வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்துவது உட்பட பழங்குடியினர் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
கருத்துகள்