பாதுகாப்பு அமைச்சகம் 21-வது நிறுவன தினத்தை
ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை வீரர்கள் தலைமையகம் கொண்டாடியது
21-வது நிறுவன தினத்தை ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை வீரர்கள் தலைமையகம் 2021 அக்டோபர் 1 அன்று கொண்டாடியது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர், தலைமைப் பணியாளர் குழு தலைவர் (ஏர் மார்ஷல் பி ஆர் கிருஷ்ணா) முப்படைகளின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘இணைந்திருப்பதன் மூலம் வெற்றி’ எனும் முழக்கத்துடன் 2001 அக்டோபர் 1 அன்று முப்படைகளின் அமைப்பாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை வீரர்கள் தலைமையகம் நிறுவப்பட்டது. பாதுகாப்பு படைகளுக்கிடையேயான கூட்டுத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், பிற துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் பணி இதற்கு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு நுண்ணறிவு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், ராணுவ ராஜதந்திரம், தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டுமானம், பாதுகாப்பு விண்வெளி நிறுவனத்தை செயல்படுத்துதல், பாதுகாப்பு சைபர் முகமை மற்றும் ஆயுதப்படை சிறப்பு செயல்பாட்டு பிரிவு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் பல்வேறு முக்கிய தேசிய முயற்சிகளை கடந்த இரண்டு தசாப்தங்களாக பாதுகாப்பு படை வீரர்கள் தலைமையகம் மேற்கொண்டு வருகிறது.
ராணுவ விவகாரங்கள் துறை மற்றும் பாதுகாப்புப் படை தளபதி பொறுப்பு ஆகியவற்றின் உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்கள், பாதுகாப்பு படைகளின் நவீனமயமாக்கல், மாற்றியமைத்தல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தையும் செயல்பாட்டையும் அளித்தன.
பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பை பாதுகாப்பு படை வீரர்கள் தலைமையகம் உறுதிப்படுத்துகிறது.
கருத்துகள்