இரத்த சோகை நோய் நமக்கு பெரும் சவாலாக உள்ளது நாட்டில் இருவரில் ஒருவருக்கு இரத்த சோகை உள்ளது காஞ்சிபுரம்மாவட்டஆட்சியர்டாக்டர்ஆர்த்தி தகவல்.
நாட்டில் பல நோய்களை நாம் முற்றாக அழித்துள்ளோம். குறிப்பாக போலியோ என்ற இளம்பிள்ளை வாதநோயை ஒழித்துள்ளோம். ஆனால் நமக்கு இரத்தசோகை நோய் பெரும் சவாலாக உள்ளது. நாட்டில் 50 சதவீதம் பேருக்கு அதாவது இருவரில் ஒருவருக்கு இரத்தசோகை உள்ளது. இது ஊட்டச்சத்து தொடர்புடைய ஒரு குறைபாடாகும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மாதவிடாய் பிரச்சனைகளால்தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எனவே வளர்இளம் பெண்களும் கர்ப்பிணிகளும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரைகள், பேரிச்சம்பழம், நவதானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டமும் இணைந்து இன்று(2810.2021) முற்பகல் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடத்திய ஊட்டச்சத்து &இரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தல், கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையின் முக்கியத்துவம், இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா மற்றும் தேசிய ஒற்றுமை தினம் ஆகியவை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் உரையாற்றியபோது மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு க.சற்குணா தலைமை வகித்தார்.
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர் துவக்கவுரை ஆற்றினார். கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் ஒன்றரை ஆண்டுகளாக மாணவ மாணவிகளைச் சந்திக்க முடியாமல் இருந்தது. இன்று இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தினசரி கொரோனா தொற்றை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமே மூன்றாம் அலையைத் தடுக்க முடியும். ஆனால் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் உள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து 100 சதவீத மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்ற நிலையை ஏற்படுத்துவார்கள். 75 ஆண்டுகால சுதந்திரத்தில் நாட்டில் பெண்களின் நிலை வெகுவாக முன்னேறியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்று சட்டமன்ற உறுப்பினர் திரு க.சுந்தர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி விளக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கணேசன், உதவி செய்தி &மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ஏ.கே.பெருமாள் உடையார், வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் வைத்தியர் ப.ராஜா, வைத்தியர் மணிகண்டன் மற்றும் சென்னை அருள் ஹெல்த்கேர் டாக்டர் எஸ்.அருளானந்த குமார், பள்ளித் தலைமையாசிரியை திருமிகு எம்.பி.இராஜீவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடிப் பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சியும் வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் சார்பில் மருத்துவ மூலிகைகள் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மூலிகை முக கவசங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பரிசுகளையும் , மூலிகை செடிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தரும் இணைந்து வழங்கினர்.
நிறைவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் அங்கன்வாடிப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்
முன்னதாக மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.
கருத்துகள்