நவம்பர் 16 அன்று தில்லி ஹாத்தில் ஆதி மகோத்சவத்தை பிர்சா முண்டாவின் பேரன் திரு சுக்ராம் முண்டா திரு அர்ஜுன் முண்டா முன்னிலையில் துவக்கி வைக்கிறார்
சிறந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் நினைவாகவும் விடுதலையின் அம்ரித் மஹோத்சவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், “ஆதி மகோத்சவ்” 2021-ஐ பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரைஃபெட்) நடத்துகிறது.
தேசிய பழங்குடி திருவிழாவான ஆதி மகோத்சவ் நவம்பர் 16 முதல் 30 வரை புது தில்லியில் உள்ள தில்லி ஹாத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவை பிர்சா முண்டாவின் பேரன் திரு சுக்ராம் முண்டா மற்றும் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் நவம்பர் 16, 2021 அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்கள்.
பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் வணிகத்தின் கொண்டாட்டமான ஆதி மகோத்சவ், 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு வெற்றிகரமான வருடாந்திர முயற்சியாகும். பழங்குடியினரின் வளமான மற்றும் மாறுபட்ட கைவினை, கலாச்சாரத்தை ஒரே இடத்தில் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நமது பழங்குடியினரின் கலை, கைவினைப் பொருட்கள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் சுவையான உணவு வகைகள் அவர்களின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இதில் காட்சிப்படுத்தப்படும். 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 1000 பழங்குடியின கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்