இலவச சிறப்பு பயிற்சித் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் சென்னையில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது தனது 27-வது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்பு பயிற்சித் திட்டத்தை 2021 டிசம்பர் முதல் தேதியிலிருந்து 11 மாத காலத்திற்கு நடத்த உள்ளது.
இதற்கு தகுதியான எஸ்சி எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் தங்களது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும்.
ப்ளஸ் டூ தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆர்வமுள்ள எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். 2021 நவம்பர் 30-ம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவச விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை (ஜெராக்ஸ்) குறிப்பிட்ட காலத்திற்குள், துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், 3-வது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம், 56 சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஆவணங்களை சரி பார்ப்பதற்கு வரும் போது எந்தவித பயணக் கட்டணமோ அல்லது வேறு எந்த படிகளோ வழங்கப்பட மாட்டாது என்று சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் ஜி கே ஸ்ரீ ராக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.சிறப்புப் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
56, சாந்தோம் பிரதான சாலை, சென்னை என்ற முகவரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் இயங்கி வருகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம் எஸ்சி எஸ்டி பிரிவில் வேலை தேடுபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பிரபல நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
2021 டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 11 மாத காலத்திற்கு போட்டித் தேர்வு பயிற்சி, கணினி பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, ஆகியவற்றை அதிகபட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் நிறுவனத்திற்கு மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.1,200 வீதம் வழங்கப்படும். குரூப் சி பிரிவில் காலிப்பணியிடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் செயல்திறன் பெறும் வகையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்திற்கு சீலிடப்பட்ட உறைகளில் விண்ணப்பங்கள் 25.11.2021, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்குள் மேற்கூறிய அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும்.
மேலும், விவரங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகவும் என திரு ஸ்ரீராக் ஜிகே, துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்