அஇஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம், அன்வர் ராஜா சிவி சண்முகம் இடையே மோதல். சூடான விவாதம்
அஇஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம், அன்வர் ராஜா சிவி சண்முகம் இடையே மோதல். சூடான விவாதம் அஇஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது குறித்து முழுமையான விபரம்
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த முன்னோடியான அன்வர் ராஜா, "அதிமுகவில் வலிமையான தலைவர்கள் இல்லை. வலுவான தலைமை இல்லாத காரணத்தால் தான் தோற்று வருகிறோம்.
தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செல்லும் தலைமை தான் நமக்கு வேண்டும். கட்சியை ஒன்றிணைத்து பலப்படுத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இந்தச் சூழலை அனைவரும் புரிந்துக்கொண்டு, தேவையானவற்றை செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், "அதிமுகவில் வலிமையான தலைவராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் இருக்கிறார்கள். இருவரும் கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்கள். வலிமையான தலைமை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது" என்று கூறி, அன்வர் ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அன்வர் ராஜா அவர்களை தாக்க சி.வி சண்முகம் முயன்றுள்ளார். அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் அவரைத் தடுத்து, அமைதிப்படுத்தியுள்ளனர். இதே கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், "கட்சிக்கென தனியாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு பெயருக்கென இருக்கிறதே தவிர, எவ்வித அதிகாரமும் இன்னும் வழிகாட்டுதல் குழுவுக்கு வழங்கப்படவில்லை. அத்தோடு உட்கட்சி விவகாரம், தேர்தல் தோல்விகள் குறித்தெல்லாம் ஆராய வேண்டிய சூழல் இருப்பதால், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு பதில் 18 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவாக அமைக்க வேண்டும். வழிகாட்டுதல் குழுவை விரிவுப்படுத்தி, அக்குழுவுக்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
அதோடு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் "தொண்டர்கள் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்த கட்சியாக பணியாற்ற விரும்புகிறார்கள். சசிகலா அவர்களை இணைத்துக்கொள்வதில் தவறு இல்லை. தொண்டர்களுக்கான தலைமையை தொண்டர்களே தேர்வு செய்யட்டும். கட்சிக்கென வலுவான தலைமை தேவை. தற்போதைய தலைமையால் கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை சமாதானப்படுத்த இயலவில்லை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தற்போது கட்சி மாறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அவரைக் கூட தடுக்க தற்போதைய தலைமைகளால் முடியவில்லை. வலுவான தலைமை அமைய வேண்டும். அப்படி வலுவான தலைமை அமைந்தால், கட்சி மாறும் எண்ணத்தை நிர்வாகிகளும், தொண்டர்களும் கைவிட்டுவிடுவார்கள். அதுவரை வழிகாட்டுதல் குழுவே அதிமுகவை வழிநடத்த வேண்டும். வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். அதிமுக எனும் பேரியக்கத்தை வழிநடத்தும் அதிகாரம் படைத்த ஒன்றாக வழிகாட்டுதல் குழுவை மாற்ற வேண்டும்" என்றும் பேசியிருக்கும் தகவல் வருகிறது. கூட்டம் நடைபெற்ற நேரத்தில் முன்னால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சோழவந்தான் மாணிக்கம் காரைக்குடி சோழன் பழனிச்சாமி ஆகியோர் பா ஜ க வில் இணைந்த நிகழ்வுகள் நடந்தன.
கருத்துகள்