அரசு ஊழியர்களின் பணி குறித்த விஷயங்களைக் கையாள்வதற்காக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தனி அமர்வை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.
அரசு ஊழியர்களின் பணி குறித்த விஷயங்களைக் கையாள்வதற்காக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தனி அமர்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் ஸ்ரீநகரில் இன்று திறந்து வைத்தார்.
ஜம்முவில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அமர்வு 08.06.2020 முதல் செயல்படத் தொடங்கிய நிலையில், ஸ்ரீநகர் அமர்வின் அதிகார வரம்பு குறித்த அறிவிப்பு 17.11.2021 அன்று வெளியிடப்பட்டது. இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவால், பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் மூன்று முக்கிய முகமைகளான மத்திய நிர்வாக தீர்ப்பாயம், மத்திய தகவல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகியவை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் முழுமையாகச் செயல்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
இரண்டு காட் அமர்வுகள் உள்ள ஒரே மாநிலம்/யூனியன் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு முன்னுரிமை அளிப்பதால் புதிய யூனியன் பிரதேசம் தொடர்பான விஷயங்கள் மற்றும் சிக்கல்களில் அவர் மிகுந்த அக்கறை காட்டுகிறார் என்று அமைச்சர் கூறினார்.
திரு மோடி அரசு வெளிப்படைத்தன்மை மற்றும் "அனைவருக்கும் நீதி" என்பதில் உறுதியாக உள்ளது என்றும், கடந்த ஏழு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த சீர்திருத்தங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் உட்பட முழு நாட்டிற்கும் பயனளித்துள்ளன என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் நலனுக்காக ஆகஸ்ட் 5, 2019 அன்று 370 மற்றும் 35A சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டதில் இருந்து, ஜம்மு & காஷ்மீரில் 800-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை இங்குள்ள மக்களும் இப்போது அனுபவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
கருத்துகள்