ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவிற்கான சந்தை அணுகுமுறையை அதிகரிப்பது குறித்து, இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் ஆலோசனை
ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய தொழில் நிறுவனங்கள் உலக அளவில் தங்களது பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்து, மத்திய வர்த்தகம் & தொழில்துறை அமைச்சர் திருபியூஷ் கோயல், மும்பையில் இன்று(18.12.2021) இந்திய தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கவுன்சில் தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
ஐக்கிய அரபு அமீரக அரசுக்குச் சொந்தமான, முன்னணி, ஸ்மார்ட் சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்ட் (DP World) நிர்வாகிகள், இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் நாட்டில் வழங்கப்படும் சந்தை விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த நிறுவனம், இந்தியா மார்ட் டிரேடர்ஸ் மார்க்கெட் என்ற பெயரில், இந்திய தொழில் நிறுவனங்களுக்கு என பிரத்யேக சந்தை ஒன்றை ஏற்படுத்தி, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் சந்தை மற்றும் பிராந்திய சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ள வகை செய்துள்ளது.
உலகின் முன்னணி தடையற்ற வர்த்தக மண்டலமான, துபாயின் ஜெபெல் அலி தடையற்ற மண்டலத்தில் (Jafza) வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்தும், இந்தியத் தொழில் துறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல், “ $10பில்லியன் அளவுக்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்ததுடன், இந்தியத் தயாரிப்புகளை உலக அளவில் பிரபலப்படுத்த விரும்புவதாகவும்“ தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல்(No.1) வர்த்தக பங்குதாரராக இந்தி திகழ வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய அரபு அமீரகம், “வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது“ என்றும் திரு.பியூஷ் கோயல் கூறினார்.
பிரதமர் திரு.நரேந்திரமோடியும், பட்டத்து இளவரசர் மாட்சிமைதங்கிய ஷேக் முகமது பின் சையது அல் நஹியானும் உருவாக்கியுள்ள நல்லெண்ணங்கள், நமது குறிக்கோள்களை அடைய பேருதவியாக இருப்பதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்