இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 1,364 நட்சத்திர ஆமைகள் உயிருடன் பறிமுதல்
சுரங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நட்சத்திர ஆமைகளை சென்னை சரக்கு விமான போக்குவரத்து சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
230 கிலோ உயிர் நண்டுகளை ஏற்றுமதி செய்வதாக ஆவணங்களை அளித்துவிட்டு, அதற்கு பதில் உயிர் நட்சத்திர ஆமைகளை கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது சுங்க அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது. அதன்படி, ஏற்றுமதி செய்யவிருந்த 13 பார்சல்களில் 7 பார்சலில் 1,364 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்ததாகவும், இத்தகைய உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, பறிமுதல் செய்யப்பட்ட இந்த நட்சத்திர ஆமைகளின் மறுவாழ்வு மற்றும் இயற்கை வாழ்விடங்களை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்ததோடு, இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக சரக்கு விமான போக்குவரத்து ஆணையரகத்தின் முதன்மை சுங்க ஆணையர் திரு கே ஆர் உதய்பாஸ்கர் அளித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்