பொதுமக்களின் கருத்துக்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரைவு ‘தேசிய விமான விளையாட்டு கொள்கை
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரைவு ‘தேசிய விமான விளையாட்டு கொள்கை ‘யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வரைவு ‘தேசிய விமான விளையாட்டு கொள்கை ‘யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது. வரைவு கொள்கையை அமைச்சகத்தின் இணைய தளத்தில் : https://www.civilaviation.gov.in/sites/default/files/Draft-NASP-2022.pdf என்ற இணைப்பு மூலம் பெறலாம்.
ஆலோசனைகளை 2022 ஜனவரி 31-ம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பலாம்.
உலகின் விமான விளையாட்டு முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. பூகோள ரீதியில் விரிவான பரப்பு, பல்வேறு பரந்துபட்ட நிலப்பரப்பு , உகந்த தட்ப,வெப்ப நிலை ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது. மேலும் குறிப்பாக, இளைஞர்களை அதிகம் கொண்ட மக்கள் தொகையையும் அது பெற்றுள்ளது. சாகச விளையாட்டுக்களுக்கான கலாச்சாரமும், விமானப் போக்குவரத்தும் இங்கு வளர்ந்து வருகிறது. விமான விளையாட்டு நடவடிக்கைகள் மூலம், நேரடி வருவாயுடன், விமானப் பயணம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ளூர் வேலைவாய்ப்பு போன்ற பலதரப்பட்ட பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் விமான விளையாட்டு மையங்களை உருவாக்குவதன் மூலம், வெளிநாட்டு விளையாட்டு நிபுணர்கள், சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு அதிகமாக வர வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதன் காரணமாக, மத்திய அரசு விமான விளையாட்டு துறையை பாதுகாப்பான விதத்திலும், எளிதில் அணுகும் வகையிலும், நிலைத்தன்மையுடன் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான பயிற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள், விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியமாகும்.
வரைவு தேசிய விமான விளையாட்டு கொள்கை ( என்ஏஎஸ்பி 2022) இத்திசையை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும். கொள்கை வகுப்பாளர்கள், விமான விளையாட்டு பயிற்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இது உருவாக்கப்படும். காலத்திற்கு தகுந்தவாறு மாறுதல்களுக்கு உட்படுத்தும் வகையில் இது அமைந்திருக்கும்.
கருத்துகள்