ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டதில், மக்களில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தலைமை செயலாளர் வெ.இறையன்பு இஆப வெளியிட்ட அறிக்கையில்: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து அரசு ஆணையின் படி, பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்றில்லை என்பதற்கான சான்றும் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். இதில், காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் பதிவு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டத்ற்கான சான்றும், கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாகக் காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள்