சூர்ய நமஸ்காரம்; மகர சங்கராந்தியையொட்டி நடைபெறும் உலக அளவிலான முதலாவது செயல்முறை விளக்கத்தில் ஒரு கோடி பேர் பங்கேற்கின்றனர்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில், மகர சங்கராந்தி தினத்தையொட்டி, ஆயுஷ் அமைச்சகம் முதலாவது உலக அளவிலான சூர்ய நமஸ்கார செயல்முறை விளக்கத்தை நடத்துகிறது. இதில் ஒரு கோடி பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மக்களிடையே உரையாற்றி, சூர்ய நமஸ்காரத்தைப் பற்றிய செய்தியை வெளியிடுவார். ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர். முஞ்ச்பாரா மகேந்திரபாய் கலுபாயும் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் இருந்து சூர்ய நமஸ்காரத்தை மேற்கொண்டு, பதிவு செய்ய பயன்படுத்திய இணைப்பில் வீடியோக்களை பதிவேற்றுமாறு ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலை 7 மணி முதல் 7.30 மணி வரையிலான 13 சுற்றுக்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியின் நேரலை தூர்தர்ஷன் தேசிய அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியின் போது, உலகின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி யோகா ஆசிரியர்கள் மற்றும் குருக்கள் தங்கள் செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு. வைத்யா ராஜேஷ் கொடேச்சா, எம்டிஎன்ஐஒய் இயக்குநர் டாக்டர். ஐ.வி. பசவராட்டி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார்கள்.
கருத்துகள்