பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற பாதையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாமல் பாதுகாப்புக் குளறுபடி ஏற்பட அந்த மாநில அரசு காரணமானதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ள நிலையில்,
இவ்விவகாரத்தில் எந்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்களென பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். "என்னுடைய செயலாளருக்கு கோவிட் தொற்று உறுதியானதால் அவருடன் தொடர்பிலிருந்த என்னால் பிரதமரை அழைக்கச் செல்ல முடியவில்லை. பிரதமரின் பயண வழி திடீரென மாற்றப்பட்டது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பெரோஸ்பூர் மாவட்டத்தில் திடீரென சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அவர்களை அப்புறப்படுத்த 20 நிமிடங்கள் ஆகும்.
வேறு வழி குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு கூறினோம். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். எந்தப் பாதுகாப்புக் குளறுபடியும் நடக்கவில்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் விசாரணை நடத்துவோம். பிரதமருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எந்த அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள். அவர் திரும்பிச் செல்ல நேர்ந்ததற்காக வருந்துகிறேன்" எனத் தெரிவித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் மா நிலத்திற்குள் நுழையவிடாமல் பஞ்சாப் மாநிலத்தின் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். ஓராண்டுகாலம் கொடுங்குளிரிலும், மழையிலும் போராடிய 700 விவசாயிகள் மடிந்ததை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர் ஒருவரின் மகன் விவசாயிகளை கார் ஏற்றிபீ படுகொலை செய்ததை விவசாயிகள் மறக்கவில்லை என்பதை இந்த நிகழ்வு உணர்த்தும் நிலையில்
மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படையும் பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள். மிகவும் திட்டமிட்டு,கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய செயல் .
பிரதமரின் பாதுகாப்பு அதிமுக்கியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இருக்கவும் முடியாது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு ,அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயணத்திட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலமைச்சரே நள்ளிரவு வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனித்துள்ளதாகவும். இடையில் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான தட்பவெப்ப நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.
வானிலை சீரடையாதபோது சாலை வழியாக தேசியத் தியாகிகள் நினைவிடத்திற்கு அவர் செல்வாரென முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தேவைப்படும் பஞ்சாப் காவல் துறையின் தலைமை இயக்குனரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டபின் அவர் சாலை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேம்பாலத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.
பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் மாநிலத்தின் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின் படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும். மேலும் அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தின் அரசு சாலை வழியாகச் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பின் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வதென முடிவு செய்யப்பட்டது.
இச்சூழ்நிலையில் கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் தற்போது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்