ஆக்ஸிஜன் தயார் நிலை குறித்து, மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
.
வென்டிலேட்டர் உட்பட ஆக்ஸிஜன் கருவிகள், பிஎஸ்ஏ/ஆக்ஸிஜன் ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நிலவரம் மற்றும் கொவிட் மேலாண்மை குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் இன்று காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
நாட்டில் கொரோனோ பரவல் அதிகரிப்பதையும், ஒமிக்ரான் வகை தொற்று ஏற்படுவதையும் சுட்டிக் காட்டிய திரு. ராஜேஷ் பூஷன், மருத்துவமனைகளில் எந்தவித அவசர சூழலையும் சந்திக்க, அனைத்து வகையான ஆக்ஸிஜன் சாதனங்களையும் உறுதி செய்ய வேண்டியது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கியமான பொறுப்பு என கூறினார்.
தினசரி ஆய்வுகள் மூலம், 2வது அவசரகால கொவிட் நடவடிக்கை நிதியை(இசிஆர்பி), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக பயன்படுத்தி, அதன் செலவின விவரங்களை தேசிய சுகாதார திட்ட பிஎம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போதுதான் சுகாதார கட்டமைப்புகளை மாவட்ட அளவில் வலுப்படுத்த கூடுதல் நிதியை மாநிலங்கள் பெற முடியும் என அவர் தெரிவித்தார். திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்குகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் பைப்லைன்கள் அமைக்க 2வது அவசரகால கொவிட் நடவடிக்கை நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகளை மாநிலங்கள் தங்களின் சொந்த செலவிலும், சிஎஸ்ஆர் நிதி மூலம் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார். மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் கசிவின்றி ஒழுங்காக செயல்படுகிறதா என்பது பற்றி அனைத்து மாநிலங்களும் ஒத்திகை பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டன. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை கல்லூரிகளிலும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதை மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
விநியோகிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் , மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.
தேசிய ஆக்ஸிஜன் பயிற்சி திட்டத்தை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 22ம் தேதி தொடங்கியது. ஆக்ஸிஜன் ஆலை ஆப்ரேட்டர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி நிறைவு செய்யப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த பயிற்சியில் 738 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். ஆன்லைன் மூலம் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலையை செயல்படுத்தும் பயிற்சியையும், பயிற்சி துறை இயக்குனரகம் நாடு முழுவதும் 24 பிராந்திய மையங்களில் நடத்துகிறது. இதில் இதுவரை, 4,690 பேர் 180 மணி நேர பயிற்சி திட்டத்தில், பயிற்சி பெற்றுள்ளனர். 6,825 பேர், 10 மணி நேர பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.
கருத்துகள்