தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது-நாடாளுமன்றத்தில் ராகுல் குற்றச்சாட்டு
தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது-நாடாளுமன்றத்தில் ராகுல் குற்றச்சாட்டு !.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பேசினார், "ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா" என பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப். பேசினார் மேலும், “உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்றார்.மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும் வேளையில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத 3 அடிப்படை விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். முதலாவதாக, நான் மிக முக்கியமானதாகக் கருதுவது, 'இரண்டு இந்தியா' யோசனை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது.இவை நாங்கள் தயார் செய்த புள்ளிவிவரங்கள் அல்ல. இவை உண்மையான தரவுகள். இந்த 27 கோடி மக்களையும் நீங்கள் மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளீர்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், எரிவாயு விநியோகம், எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் அதானி என்றால் மறுபக்கம் அம்பானி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குப் பணம் அனைத்தும் செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத் தலைவர் உரையானது அரசாங்கம் செய்ததாகக் கூறும் விஷயங்களின் பட்டியலாகவே இருந்துள்ளது. அந்த உரையில் சிக்கல்களுக்கான தீர்வுகள் இல்லை. நம் நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை அது பேசவில்லை. "இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எதுவும் தேவைப்படாமல் நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய பணக்காரர்களுக்கென ஓர் இந்தியா உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 46 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? நீங்கள் அமைப்பு சாரா தொழிலை நசுக்கிவிட்டீர்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை சிதைத்துவிட்டீர்கள். உங்கள் கவனமெல்லாம் வெறும் 5 முதல் 10 பேர் மீதுதான்.
நாட்டில் ஏஏ வேரியன்ட் உள்ளது. அது 'AA' அதானி, அம்பானி வேரியன்ட் இந்திய பொருளாதாரம் முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. எனக்கு பெரிய தொழிற்சாலைகள் மீது எந்த வெறுப்புமில்லை. நீங்கள் அதன் மீது கவனம் செலுத்தங்கள். ஆனால் அவற்றால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான் அடிமட்ட மக்களுக்கான வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும்.
மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். தமிழகத்தில் உள்ள எனது சகோதரருக்கு, மகாராஷ்டிராவில் உள்ள எனது சகோதரிக்கு இருக்கும் அதே உரிமை இருக்கிறது. உ.பி., பிஹார், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் இன்னும் பிற மாநிலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கும் சம உரிமை உள்ளது.
இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது தான் ஒன்றியத்தின் பணிகள். கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் இராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். 1947 ஆம் ஆண்டில் அரசாட்சிக்கு காங்கிரஸ் முடிவு கட்டியது. ஆனால் இப்போது மீண்டும் இராஜா எழுந்துள்ளார். இந்திய அமைப்பில் இருந்து பஞ்சாப்பும், தமிழ்நாடும் புறக்கணிக்கப்படுகிறது.. அவர்களுக்கு குரலில்லை. பஞ்சாப் விவசாயிகளின் குரல் அந்த இராஜாவுக்குக் கேட்காது. கூட்டாட்சியின் மூலம் இந்தியாவில் ஆளாமல் குச்சியை வைத்து ஆட்சி நடத்த ஒரு இராஜா முயற்சிக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் இப்படியான குச்சி சுழற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் குச்சி மக்களால் உடைக்கப்படும் என்று அவருக்குத் தெரியவில்லை. மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது.
கேரளாவில் மக்களுக்கு ஒரு கலாச்சாரம், மாண்பு, வரலாறு இருக்கிறது. இராஜஸ்தான் மக்களுக்கும் அவர்களுக்கான மாண்பும், வரலாறும் உள்ளது. இது பல மலர்களால் ஆன ஓர் அழகிய பூங்கொத்து போன்றது. நான் எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன்.
இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன்னென்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம்.
உங்களின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது. இதுதான் தேசத்திற்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். இந்திய மக்களுக்கு எதிரான குற்றம். நீங்கள் அலட்சியமாக மாயையில் இருக்காதீர்கள். எதிரிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
எனது பாட்டியின் மீது 32 குண்டுகள் பாய்ந்தன. எனது தந்தை வெடிகுண்டுத் தாக்குதலில் துண்டுத் துண்டாக சிதறினார். ஆனால், இன்று உங்களின் கொள்கைகள் பாகிஸ்தானையும், சீனாவையும் ஒற்றுமையாகச் செய்துள்ளது. இது ஆபத்தானது. இது பிரச்சினையை உருவாக்கும். நாட்டுக்கு இப்போது உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்காமல் நடந்துகொள்கிறீர்கள்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 'நான் ஒரு தமிழன்' என்று பதில் கொடுத்துள்ளார். இந்தக் காணொளி இப்போது வைரலாகிறது. இதே காணொளியில் உத்தரப் பிரதேசம் குறித்து உரையில் ஏன் பேசவில்லை என்பதுபோல் அந்த நபர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் கொடுப்பதைத் தவிர்த்து வேகமாக நடந்துச் சென்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்தியின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பாஜக தலைவர், மத்திய வெளியுறவு அமைச்சர், ஏன்... அமெரிக்க செய்தித் தொடர்பாளர் வரை வரிந்துகட்டிக் கொண்டு எதிர்வினையாற்றுகின்ற நிலையில். அவர் பேசியதற்கு தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வர் தனது பதிவில் ...'இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை , இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும்!
சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள்!
Dear Rahul Gandhi, I thank you on behalf of all Tamils for your rousing speech in the Parliament, expressing the idea of Indian Constitution in an emphatic manner. You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. எனப் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்