ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வழங்கிய விசாரணை அறிக்கையில் பல்வேறு பிரச்சினை என முதல்வர் தகவல்
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயமுத்தூர் திருமண விழா உரையில் "முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மறைவில் மர்மமிருப்பதாக அவர்கள் கட்சியினரே கூறினர்.
அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்து தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார். இதனால் அப்போது ஒப்புக்காக ஓர் விசாரணை கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த கமிஷனும் அப்போது ஒப்புக்காகவே செயல்பட்டுவந்தது. 'திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம்' என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தோம். கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதைத் தற்போது சொல்ல மாட்டோம். அந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது. அன்றைய முதல்வர் `அதைத் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ எனக் கூறினார். அந்த அறிக்கையையும் சட்டமன்றத்தில் வைக்கவிருக்கிறோம். எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்