பழனி அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய குடமுழுக்கு விழா கோலாகலம்.
"அவனிதனிலே பிறந்து மதலையெனவே வாழ்ந்து அழகுபெறவே நடந்து .. இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து. பதினாறாய்
சிவகலைகளாகமங்கள் மிகவுமறை யோதுமன்பர. திருவடிகளே நினைந்து. துதியாமல்
தெரிவையர்க ளாசைமிஞ்சி வெகுகவலை யாயுழன்று திரியுமடி யேனையுன்றனடி சேராய்
மௌவுனவுப தேச சம்புமதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீதணிந்த மகாதேவர் மனமகிழ வேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார துங்க .வடிவேலா
பவனிவரவேயுகந்து மயிலின்மிசை யேதிகழ்ந்து படியதிரவேநடந்த.. கழல்வீரா
பரமபத மேசெறிந்த முருகனென வேயுகந்து பழநிமலை மேலமர்ந்த பெருமாளே." ஓம் முருகா.
பழநி மலைக்கு எப்போது சென்றாலும் எந்தத் தருணத்தில் சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகித்த நீரையோ பாலையோ கொஞ்சம் அருந்துங்கள்.
பழநி வாழ் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் மற்றும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்துங்கள். தீராத நோய் அனைத்தும் தீர்த்து வைப்பார் சகல தோஷங்களையும் போக்கியருளுவார் பாலதண்டாயுதபாணி.
முருகப்பெருமான் என்றதும் ஆறுபடைவீடு நினைவுக்கு வரும். ஆறுபடைவீடு என்றதும் பழநி மலை நினைவுக்கு வரும். பழநிமலை என்றதும் ஸ்ரீதண்டாயுதபாணி நினைவுக்கு வருவார். தண்டாயுதபாணி சுவாமியை நினைக்கும் போதே சித்தர் போகர் நினைவுக்கு வருவார்.
போகர் எனும் சித்தபுருஷரின் மகிமைகள் ஏராளம். தனக்குத் தெரிந்த யோகக் கலைகளைக் கொண்டு மூலிகைகளை சேகரித்தார். மொத்தம் 4,448 மூலிகைகள் கொண்டு, 81 பாஷாணங்களாக மாற்றினார். அதை ஒன்பது பாஷாணங்களாகப் பிரித்துக்கொண்டார்.
அதை மருந்தாக மாற்றினர். இப்படியான பாஷாணங்களைக் கொண்டு மனிதர்களுக்கு இறப்பே நிகழாத மருந்தை உண்டு பண்ணினார். அதுமட்டுமா? இந்த பாஷாணத்தைக் கொண்டு தான் முருகப்பெருமான்ன் விக்கிரகத்தை உண்டு பண்ணினார் என்கிறது பழநி மலைக் கோவிலின் ஸ்தல புராணம்.
பழநி மலையின் மீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தன் அருளால் மட்டுமல்ல தன் உருவாலும் அளப்பரிய சக்தியைக் கொண்டிருக்கிறார். பழநியம்பதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானு க்கு அபிஷேகிக்கப்படும் நீரைப் பருகுவதோ பாலபிஷேகம் செய்த பாலைப் பருகுவதோ தீராத நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து வைக்கும் என்று தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
ஆறுபடைவீடுகளில் ஓங்கி உயர்ந்த மலையின் மீது குடிகொண்டிருக்கும் பழநியம்பதி அற்புதமான திருத்தலம். ஆறுபடை வீடுகளில், இந்தத் தலத்துக்குத் தான் தைப்பூசத் திருநாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். பல கோவில்களுக்கும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தாலும் இந்தத் ஸ்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல், காவடி எடுத்து வரும் அன்பர்களும் பால் குடம் எடுத்து வரும் அன்பர்களும் ஆயிரக்கணக்கான அளவில் இருக்கும். குட முழுக்கு காணும் பழனியம்பதிக்கு அரோகரா.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டிக் கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியம் தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்களாக நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உபயோகிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.
இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்பு சந்தன காப்பை முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர். பிறகு இந்த முறை மாற்றப்பட்டது.
விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும், இதற்காக 4000 க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.
போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் இன்றளவும் பிரசித்தி பெற்றிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.
தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது . . ."அண்ணாந்து திருநீறு அணிகின்ற அடியார்கள் எண்ணத்தில் உன்பேரை எழுதிவைப்பேன். தென்னாடு சிவனாரும் தொழுகின்ற வடிவேலை தேடாது போவோரைத் தெளிய வைப்பேன் குறமாது வள்ளி குறியொன்று சொல்லி வாராத நாளில் தூது செல்வேன் அழியாத புகழை அருணகிரித் தமிழை அடிவாசல் தோறும் எழுதிவைப்பேன். எழுதாத நாளைப் பழுதென்பேன்"
வெற்றி வேலன் முருகனுக்கு அரோகரா.என்ற திருநாமம் கலந்து இயம்பும் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ்
தமிழ் மந்திரங்கள் ஒலிக்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..
விண்ணை எட்டிய அரோகரா முழக்கம் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டம்.. எங்கும் கந்தனுக்கு அரோகரா..
தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற முழக்கம் பழனி எங்கும் எதிரொலிக்கிறது.
வானத்தில் கருடன் வட்ட மிட..
சிவாச்சாரியார்கள் பச்சைக் கொடி அசைத்த உடன் பழனி மலை முருகன் கோவில் ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் மந்திரங்கள் ஒலிக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படுவது திருஆவினன் குடி எனப்படும் பழனி.
இந்த ஆலயத்தில் தினசரியும் முருகனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் நாட்களில் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
நேற்றைய தினம் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், பாதவிநாயகர், சேத்ரபாலர், சண்டிகாதேவி, இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் முதலான உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று அதிகாலை 8ஆம் கால யாக பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்கள் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வானத்தில் கருடன் வட்டமிட்ட உடன் சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க 9 மணிக்கு ராஜகோபுரம், தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.
மலைக்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2000 பக்தர்கள் மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரத்தில் தென்மண்டல ஐஜி தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பாபிஷேகம் முடிந்த உடன் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
கும்பாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள் மீது 8 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கருத்துகள்