காவல்துறை அதிகாரிகளோ, அலுவலர்களோ பூங்கொத்துக் கூட வாங்கக் கை நீட்டக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல் துறையினர் பரிசுப்பொருட்கள், வெகுமதிகள், வரதட்சணைகள் வாங்கக்கூடாதென காவல்துறை தலைமை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள்,வெகுமதிகள் மற்றும் வரதட்சணைகள் வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாகப் பின்பற்றுவது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகர் மாவட்டக் காவல் துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிபவர் எஸ்.தென்னரசு. இவருக்குக் கிடைக்க வேண்டிய காவல் ஆய்வாளர் பதவி உயர்வை நிறுத்தி வைத்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் 18.ஆகஸ்ட்.2014-ஆம் தேதியில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்துப் பிறப்பித்த உத்தரவில்
காவல்துறை போன்று சீருடைப் பணிகளில் இருப்பவர்கள் பணியின் போதும், பணியில் இல்லாத போதிலும் ஒழுக்கமாகவே இருக்க வேண்டும். மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையிலுள்ளது. அவருக்கு ஊதிய உயர்வு நிறுத்தத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் அவர் பதவி உயர்வுக்குத் தகுதியானவரல்ல. காவல்துறை நடத்தை விதியில் காவல்துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி, பணம் வாங்குவது வரதட்சணை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதனால் காவல்துறை அதிகாரிகள் பரிசுப்பொருட்கள் என்ற பெயரில் பூங்கொத்து, பழங்கள் மற்றும் பல பொருட்களைப் பெற முடியாது. ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு பூங்கொத்துகள், பழங்கள் பரிசாக வழங்கப்படுகிறது தொடர்கிறது.
அதனால் காவல்துறையின் நடத்தை விதிகளை காவல்துறையில் பணியிலிருப்பவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் நினைவுபடுத்த வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பூக்கள், பூங்கொத்துகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கக்கடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதனால் காவல்துறையில் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை காப்பாற்றும் வகையில் காவல்துறையில் பணியிலிருப்பவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி, வரதட்சணை வாங்கக்கூடாது என்ற காவல்துறை நடத்தை விதியை தீவிரமாகப் பின்பற்றவும் வேண்டும். இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் நான்கு வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்