ஸ்மார்ட் சிட்டி இயக்கம் மார்ச் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நவீன நகரங்கள் இயக்கம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி மிஷன் இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு புதுமையான முயற்சியாகும். ஜூன் 2015-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் பல புதுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
100 நகரங்களில் பலவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல மிகவும் தனித்துவமானவை என்பதுடன் முதல் முறையாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 100 நகரங்களில் 8,000-க்கும் மேற்பட்ட பல்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இன்றைய நிலவரப்படி, 100 நகரங்களில் 7,188 திட்டங்கள் (மொத்த திட்டங்களில் 90%) நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.1,44,237 கோடியாகும். 19,926 கோடி மதிப்பிலான மீதி 830 திட்டங்களும் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.
மீதமுள்ள 10% திட்டங்களை முடிக்க இன்னும் சில கால அவகாசம் வழங்குமாறு சில மாநில அரசுகள் மற்றும் நகரப்புற நிர்வாகப் பிரதிநிதிகளிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்தன.
இந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, இந்த மீதமுள்ள 10% திட்டங்களை முடிக்க மத்திய அரசு பணி காலத்தை 31 மார்ச் 2025 வரை நீட்டித்துள்ளது. தற்போது இந்த இயக்கத்தின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளும் 31 மார்ச் 2025க்கு முன் முடிக்கப்படும்.
கருத்துகள்