நடிகர் சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் மீதான வழக்கு: பிப்ரவரி மாதம் 17- ஆம் தேதி தீர்ப்பு
சீமான் ஏமாற்றியதாக விஜயலட்சுமி புகார் மீதான வழக்கு: பிப்ரவரி மாதம் 17- ஆம் தேதி தீர்ப்பு
வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையிலிருப்பது ஏன் என நீதிபதி வினா.;
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் செபஸ்தியான் என்ற சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையிலிருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்திய தண்டனைச் சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட (பாலியல் வன்கொடுமை) வழக்கு என தெரிவித்தார். அதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதின் அடிப்படையில் வழக்கை பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றே இந்த வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்..
கருத்துகள்