வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் யாஸ் புயல் தயார்நிலை குறித்து தொழில்துறை தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடல்
யாஸ் புயல் தயார்நிலை குறித்து தொழில்துறை தலைவர்களுடன் ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இன்று கலந்துரையாடினர். இதில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புயல் பாதிப்பை குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு ஆலோசனைகள், நாள் ஒன்றுக்கு நான்கு முறை வழங்கப்படுவதாக கப்பல் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து செய்யப்படும் எனவும், காற்றின் வேகம் அதிகரிக்கும்போது சரக்கு ரயில் போக்குவரத்து ஒழுங்குமுறைப்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாஸ் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அதிகாரிகள் விளக்கினர்.
சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்படுவது, போதிய நம்பிக்கையை அளிப்பதாக தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதிப்பு குறைவாக ஏற்படுவதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுவதாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து, மற்ற பகுதிகளுக்கு திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் பாதிப்பு எதுவும் இருக்காது என மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார்.
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘டவ்-தே புயலுக்கு முன்பாக தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தியது இரு தரப்பினருக்கும் உதவியாக இருந்தது என்றும், சிறந்த விழிப்புணர்வு, தகவல்கள் கிடைப்பது மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை அனைவரின் இழப்பை குறைக்க உதவியது என்றும் கூறினார்.
கருத்துகள்