மூவர் கொலை வழக்கை இராமநாதபுரம் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை
முக்குலத்தோர் சமுதாய தலைவர் முக்குலத்தேவர் புலிப்படை தலைவரான பரமக்குடி பாண்டித் துரைத்தேவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குச் சென்றுவிட்டு பாம்புவிழுந்தான் பகுதி வழியாகத் திரும்பிய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேலங்குடியைச் சேர்ந்த சிவகுமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் பசும்பொன்னிலிருந்து பொன்னையாபுரம் வழியாக இரு சக்கர வாகனத்தில் திரும்பிய சிவகங்கை மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மாரிக் கண்ணன், கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
மூவர் கொலை தொடர்பாக எமனேஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனி முருகன் என்ற நபர் உட்பட பலரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் என்னை சாட்சியாக சேர்த்துள்ளனர். சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இவ்வழக்கின் 31 சாட்சிகள், நீதிமன்றத்தில் ஆஜராகி பிறழ் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மிரட்டலுக்குப் பயந்து பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை இராமநாதபுரம் மாவட்ட நீதிமன் றத்தில் தொடர்ந்து நடைபெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாக வாய்ப்புள்ளது. எனவே, மூவர் கொலை வழக்கின் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். பின்னர், இராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, 31 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதம். இரண்டாம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
கருத்துகள்