பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம். குழந்தைகளுக்கான பிரதமரின் நலநிதிக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடக்கம்
குழந்தைகளுக்கான பிரதமரின் நலநிதிக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்கள், பாதுகாவலர்கள், தத்தெடுத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் நலநிதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.
இத்திட்டம், கொவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு விரிவான கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது சுகாதார காப்பீடு, கல்வி ஆகியவற்றின் மூலமும், 23 வயது அடைந்ததும் ரூ.10 லட்சம் நிதியுதவியுடன் கூடிய நலனையும் அந்த குழந்தைகளுக்கு வழங்குகிறது.
இதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் pmcaresforchildren.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் குழந்தைகளுக்கான பிரதமரின் நலநிதி திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளை அடையாளம் கண்டு, பயன்களை வழங்க முடியும். குழந்தைகளுக்கான பதிவு மற்றும் பயனாளிகளை அடையாளம் காணும் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இணையதளம் தேவையான அண்மைத் தகவல்களை தொடர்ந்து வழங்கும்.
இது போன்ற குழந்தைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களின் செயலாளர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்காக பிரத்தியேக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தை 011-23388074 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது pmcares-children.wcd@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த இணையத்தில் குழந்தைகளின் பதிவு முன்னேற்றத்தை கண்காணிக்கும்படி மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்