பெரம்பலூர் மாவட்டம் எழுமூரில் தூய்மை இந்தியா இயக்கம், கோவிட் தடுப்பு தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகம் நடத்தியது
75 வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டம் எழுமூரில் தூய்மை இந்தியா இயக்கம், கோவிட் தடுப்பு தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகம் நடத்தியது
இந்நிகழ்ச்சியில் எழுமூர் பஞ்சாயத்து தலைவர் திரு ஆர் ரகுபதி, தலைமை உரையாற்றினார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் திருச்சி கள விளம்பர அலுவலர் கே.தேவிபத்மநாபன் அறிமுக உரையாற்றுகையில், நாட்டில் 100 கோடி கோவிட் தடுப்பூசி என்ற சாதனை எட்டியுள்ளதாக கூறினார். தூய்மையான இந்தியாவே உருவாக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் கனவு நிஜமாக்கவே தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இதுவரை 10 கோடியே 71 லட்சம் தனி நபர் கழிப்பிடங்களும், நகர்ப்புறத்தில் இதுவரை 62.60 லட்சம் தனி நபர் கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் 6 லட்சம் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி “ஒரே பாரதம் உன்னத பாரதம்” திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.
சிறப்புரையாற்றிய வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சேகர், நோய்களைத் தடுப்பதில் சுத்தம் மிகவும் முக்கியம் எனக் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறைகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார். அவற்றை மக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன், நேரு யுவகேந்திரா தமிழரசன், மருத்துவ அலுவலர் நேரு உட்பட பலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடைத் தவிர்க்க துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டன. ஊட்டச்சத்துக் குறித்த உறுதிமொழியும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது.
கருத்துகள்