மக்களுக்கு தொண்டாற்றுவதை மேம்படுத்த குடிமைப் பணிகளில் தார்மீக மறுமலர்ச்சி தேவை என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
சாதாரண மக்களுக்கு தொண்டாற்றுவதை மேம்படுத்த குடிமைப் பணிகளில் தார்மீக மறுமலர்ச்சி தேவை என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு, சாதாரண மக்களுக்கு தொண்டாற்றுவதை மேம்படுத்த குடிமைப்பணிகளில் தார்மீக மறுமலர்ச்சி அவசியம் என வலியுறுத்தியதுடன், வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சரவை செயலருமான திரு பிரபாத் குமார் எழுதிய ‘’பப்ளிக் சர்வீஸ் எதிக்ஸ்’’ என்ற நூலை குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் வெளியிட்டு உரையாற்றிய திரு வெங்கையா நாயுடு, ஊழலை சகித்துக் கொள்ளும் தன்மையை அறவே கைவிட்டு, நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும், வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் இதயத்தை ஊழல் தின்று வருவதாக கூறிய அவர், தவறு செய்யும் குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், உரிய நேரத்தில், கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசு ஊழியர்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேசமயம், மக்களின் நலன் கருதி துணிச்சலான முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
நேர்மையான அதிகாரிகளை கொண்டாடுவதுடன், அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பொது வாழ்வில் நன்னடத்தையை உறுதி செய்ய, குடிமைப் பணி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியர் திரு பிரபாத் குமார், ஐசி நிர்வாக மையத்தின் துணைத்தலைவர் திரு மகேஷ் கபூர், தலைமை செயலர் திரு சாந்தி நரைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்