திரைப்படத் தொழிலுக்கு உதவக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா
திரைப்படத் தொழிலுக்கு உதவக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வ சந்திராதிரைப்படத் தொழிலுக்கு உதவக்கூடிய அனைத்துநடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ளும் என மத்தியதகவல் ஒலிபரப்புத் துறைசெயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவுச் சட்டம்-1952-ல் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த பிற பிரச்சனைகள் குறித்து திரைப்படத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர், திரைப்படத்துறை செழித்து விளங்குவதை உறுதி செய்யவும், இந்திய திரைப்படங்கள், சர்வதேச அளவில் சென்றடைவதை உறுதி செய்யவும் இதுபோன்ற கலந்துரையாடல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தி வருவதாக கூறினார்.
திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக திரைப்படத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் ஏற்கனவே இணைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒளிப்பட சட்டத்திருத்த வரைவு மசோதாவில் இடம் பெற உள்ள அம்சங்கள் மற்றும் திருட்டு வீடியோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அம்சங்களுக்கு, திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி நீர்ஜா சேகர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முன் முயற்சிகள் குறித்து திரைப்படத்துறையினருடன் விவாதித்தார். மேலும் வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கான ஊக்கத்தொகை மற்றும் சர்வதேச ஊடக & பொழுதுபோக்கு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள், திரை அடர்த்தி விவகாரங்கள், விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களுக்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 50 பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் திரு பிரசூன் ஜோஷி, தலைமைச் செயல் அதிகாரி திரு ரவீந்தர் பாக்கர், தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தின் இயக்குனர் திரு பிரகாஷ் மகதம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இயக்குனர் (திரைப்படங்கள்) திருமதி தன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்
கருத்துகள்