துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நீதிவிசாரணை செய்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் , மற்றும் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கைகளை, சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 7:15 வரை நீடித்ததில்
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மே மாதம் 18 ஆம் தேதியில் அரசிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனையிலுள்ளன. அந்தத் துறைகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், அதற்கான விபரம் அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவெப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தாக்கல் செய்த விசாரணை ஆணைய அறிக்கையும், 27 ஆம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்ததில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைப்படி, வி.கே.சசிகலா நடராஜன், மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது, விசாரணைக்கு உத்தரவிட, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள் பெறுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அது தொடர்பான விபர அறிக்கையுடன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மேலும்
'ஆன்லைன் ரம்மி' உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாய சீர் கேடுகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விளையாட்டுக்களைத் தடை செய்வதற்கு, அவசரச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்