ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல்.
விமான நிலைய உளவுத்துறை பெண் அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஃபிளை துபாய் விமானத்தின் மூலம் ஞாயிறன்று துபாயில் இருந்து சென்னை வந்திறங்கி, விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியை நோக்கி வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த, படபடப்புடன் காணப்பட்ட ராசிபுரத்தை சேர்ந்த ஜோதி சின்ராஜ், 38, என்னும் பெண் பயணியை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர்.
அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் மழுப்பலாக பதில் கூறியதையடுத்து, சோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரது உள்ளாடை வழக்கத்தைவிட கனமாக இருந்ததை தொடர்ந்து, அது கத்தரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 295 கிராம் 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்