பிரதமர் அலுவலகம் சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்ததாளில், அன்னாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை
செலுத்தினார்.
டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘பாரத தாயின் புதல்வன் சத்ரபதி சிவாஜி மகராஜை, அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்.
சிவாஜி மகராஜின் வெல்லமுடியாத தைரியம், அற்புதமான வீரம் மற்றும் அசாதாரண நுண்ணறிவு ஆகியவை, நாட்டு மக்களை ஆண்டாண்டு காலத்துக்கும் ஊக்குவிக்கும். ஜெய் சிவாஜி!’’ என குறிப்பிட்டுள்ளார். சிவாஜி ராஜே போன்சலே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.
சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் பேரரசால் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்குவதிலும் , ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களுக்கு யுத்தத்தின்போது கொடுமை செய்தல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார்.
பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள். சுமார் 3,௦௦0 பிஜப்பூர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்சல்கானின் இரு மகன்களும், இரண்டு தளபதிகளும் சிறை பிடிக்கப்பட்டனர். பீஜப்பூரின் முஹம்மது அதில்ஷா அதற்கு சளைத்தவர் அல்ல. மிகப்பெரிய படை ஒன்றை ஒன்று திரட்டி இராணுவத்தளபதி ரஸ்டம் ஜமான் தலைமையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தினார். வருடம் 1659 கோல்ஹாபூர் யுத்தம் தொடங்கியது. போரின் முடிவில் இராணுவ தளபதி உயிர் பிச்சை கேட்டு தப்பித்து ஓடினார். அதில்ஷாக்கு இறுதியில் ஒரே ஒரு வெற்றி மட்டும் கிடைத்தது. பண்ஹாலா கோட்டையை சிவாஜி அடையும் முயற்சியை வருடம் 166௦ ல் தளபதி சித்திக் முறியடித்தார். இதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1673ல் சிவாஜி பண்ஹாலா கோட்டையை அடைந்தார்.
சிவாஜியின் பீஜப்பூர் சுல்தானுடனான மோதல்களும் தொடர் வெற்றிகளும் மொகலாய சக்கவர்த்தி ஔரங்கசீப் கவனத்திற்கு வந்தது. ஔரங்கசீப் ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு சிவாஜி பெரும் தடையாக அமைவார் என்று எண்ணினார். இதற்கிடையில் வேறொரு வகையில் பிரச்சினை வந்தது. சிவாஜியின் தளபதி மற்றும் சில படை வீரர்கள் அகமத்நகர் மற்றும் ஜூன்னார் அருகில் உள்ள சில மொகலாய பிரதேசங்களின் பகுதிகளுக்கு சென்று பெரியளவில் கொள்ளையடித்து வாரிசூருட்டி கொண்டு வந்தனர். ஔரங்கசீப் மழைக்காலம் என்பதால் டெல்லி கோட்டையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அதலால் தன்னுடைய தாய் மாமனும், டெக்கான் பகுதியின் கவர்னருமான ஷாயிஸ்தாகானை சிவாஜியின் கதையை முடித்து கட்ட நியமித்தார்.
ஔரங்கசீப் சக்தி வாய்ந்த மன்னர்களுள் ஒருவர். அவரது படை அளப்பரியது. ஷாயிஸ்தாகானின் படை மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி சிவாஜியின் பல கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிவாஜியின் தலைநகரான பூனாவையும் சேர்த்து இழந்தார். சிவாஜி மீண்டு வந்து நடத்திய பதில் தாக்குதல்களில் ஷாயிஸ்தாகான் படுகாயமடைந்தார். பூனா காப்பாற்றபட்டது. ஷாயிஸ்தாகான் ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு பிறகு பல முனை தாக்குதல்களை நடத்தி கொங்கன் பகுதிகளில் சிவாஜியின் பலத்தை பன்மடங்கு குறைத்தார்.
இதற்கு பதிலடியாக சிவாஜி இரவு நேரம் ஒன்றில் மொகலாயர்களின் வர்த்தக தலைநகரான சூரத்’தில் புகுந்து அதன் பெரும் வளங்களை கொள்ளையடித்து புறப்பட்டார். கடுங்கோபம் அடைந்த ஔரங்கசீப் தனது தளபதி ஜெய் சிங் தலைமையில் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களுடன் சிவாஜியின் ராஜ்ஜியத்தின் மேல் தாக்குதல் நடத்த ஆணையிட்டார். சிவாஜியின் கோட்டைகள் பறிபோனது, வளங்கள் உருவப்பட்டன, வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேல் இழப்புகளை தடுக்கும் பொருட்டு சிவாஜி சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். புரந்தார் ஒப்பந்தம் தளபதி ஜெய் சிங்’கிற்கும் சிவாஜிக்கும் கையெழுத்தான வருடம் 1665. சிவாஜி தன்னுடைய 23 கோட்டைகளையும் அளித்து 400,000 பணத்தையும் நஷ்ட ஈடாக மொகலாயர்களுக்கு அளித்தார்.
ஔரங்கசீப் சிவாஜியை ஆக்ரா வர சொல்லி அழைத்தார். தன்னுடைய படைகளை கொண்டு ஆப்கானிஸ்தான் பகுதிகளை மேம்படுத்த அழைப்பு விடப்பட்டது. தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் சிவாஜி ஆக்ரா பயணித்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்’ பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால் தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப் யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்’டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), 😳சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.
மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமையவேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.
கருத்துகள்