உரிய ஆதாரத்தைக் காட்டி 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு.எதிர்வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டுசெல்ல அனுமதிக்கக் கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 'பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அதற்காக குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், பணத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இந்த மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்களைக் காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் சொல்லலாம் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம், சோதனைகள் நடத்தலாம் எனவும், ஒட்டுமொத்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உரிய ஆதாரங்களைக் காட்டி, 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் எனவும், ஆதாரங்கள் காட்டாவிட்டால் பணத்தைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.
கருத்துகள்