நுகர்வோர் அமைப்புகளுடன் இந்திய தரநிலை அலுவலகம் காணொலி கூட்டம்
இந்திய தரநிலை அலுவலகம் (பிஸ்) சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களில் ஏதாவது பிரச்னை என்றால், அதை உடனே தெரிவிக்க வேண்டும் என பிஸ் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் திரு எம்விஎஸ்டி பிரசாத ராவ் கூறியுள்ளார்.
நுகர்வோர் அமைப்புகளுடன் மெய்நிகர் கூட்டத்துக்கு சென்னையில் உள்ள இந்திய தரநிலை அலுவலகத்தின் (பிஸ்) தென் மண்டல அலுவலகம் இன்று ஏற்பாடு செய்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்.
இதில் துவக்கவுரை நிகழ்த்திய பிஸ் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் திரு எம்விஎஸ்டி பிரசாத ராவ், நுகர்வோர் நலனுக்காக பிஸ் அமைப்பும் நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அப்போதுதான் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் (பாட்டில் குடிநீர், பிரஷர் குக்கர், எரிவாயு சிலிண்டர், எல்பிஜி அடுப்புகள், சிமென்ட், பால் பொருட்கள், பாலூட்டும் புட்டிகள், எலக்ட்ரானிக் மற்றும் ஐ.டி பொருட்கள்) கிடைக்கும் என குறிப்பிட்டார். பிஸ் சான்றிதழ், வாடிக்கையாளர்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
பிஸ் சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையில் ஏதாவது பிரச்னைகள், பிஸ் தர முத்திரையை அங்கீகாரமற்ற முறையில் பயன்படுத்துவது, பிஸ் உரிமத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் முறைகேடுகள் குறித்து தனது கவனக்கு கொண்டு வர, பொதுமக்களும், நுகர்வோர் அமைப்புகளும் தயங்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
பிஸ் சான்றிதழ் அளிக்கப்பட்ட தயாரிப்பில் வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லை என்றால், அவர்கள் அருகில் உள்ள பிஸ் அலுவகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், புகார்கள் உண்மையானதாக இருந்தால் அவர்களின் குறைகளை தீர்க்கவும், மாற்றுப் பொருள் கிடைக்கச் செய்யவும்/ சரி செய்து கொடுக்கவும் பிஸ் ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, உலக தர தின 2020 நிகழ்ச்சியில் நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பிஸ் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் அழைப்பு விடுத்தார்.
சிஎன்பிஓ-2 தலைவர் திருமதி ஜெஸ்ஸி பென்னி பேசுகையில், நுகர்வோர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், நுகர்வோருக்கும், பிஸ் அமைப்புக்கும் இடையே நுகர்வோர் அமைப்புகள் பாலமாக செயல்பட வேண்டும் எனவும் கூறினார். தர நிர்ணயம் தோன்றியது, நுகர்வோர் பாதுகாப்பில் பிஸ் அமைப்பின் பங்கு ஆகியவை குறித்தும் அவர் விளக்கினார்.
உரிமைகள் மற்றும் பொறுப்புகள், தரநிர்ணய சான்றிதழ் திட்டங்கள், நுகர்வோருக்கு எப்படி தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்கின்றன என்பது பற்றியும் அவர் விவரித்தார். முடிவில், நுகர்வோர் சட்டம் 2019, பிஸ் இணைய தளம் மற்றும் பிஸ் கேர் செயலி மூலம் புகார்கள் தெரிவிக்கும் முறையையும் அவர் விளக்கினார். நிகழ்ச்சியின் முடிவில் நுகர்வோர் அமைப்புகளின் கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேற்கண்ட தகவல்களை சென்னையில் உள்ள இந்திய தர அலுவலகத்தின் தென் மண்டல பிரிவின் துணை இயக்குநர் ( மார்க்கெட்டிங் மற்றும் நுகர்வோர் விவகாரம்) திரு எச். அஜய் கண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்